/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்
ADDED : நவ 28, 2024 05:37 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணக்கெடுப்பில் அடையாள அட்டை பெறாத கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 41 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வாரியாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட, அடையாள அட்டைபெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி வட்டார பகுதியை சேர்ந்தவர்களுக்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரிமருத்துவமனையில், சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு மருத்துவர் கோகுல்ராஜ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வாசவி, மனநல மருத்துவர் விஜயகுமார், கண் மருத்துவர் லோகநாயகி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். கலந்துகொண்ட 125 பேர்களில் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் யுடிஐடி பதிவெண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இளநிலை உதவியாளர் கவுதம்ராஜ், தரவு உள்ளீட்டாளர் விஜயலட்சுமி ஆகியோர் முகாமிற்கான பணிகளை செய்தனர்.
மருத்துவ முகாம் ரத்து
தொடர்மழை, காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடைபெற இருந்த வாராந்திர மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் ரத்து செய்யப்படுகிறது என மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.