/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
க.மாமனந்தல் - ரோடுமாமந்துார் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை
/
க.மாமனந்தல் - ரோடுமாமந்துார் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை
க.மாமனந்தல் - ரோடுமாமந்துார் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை
க.மாமனந்தல் - ரோடுமாமந்துார் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை
ADDED : மே 27, 2025 07:08 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றின் குறுக்கே க.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் ஊராட்சியில் 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள் பலரும் நாள்தோறும் கள்ளக்குறிச்சிக்கு வந்து செல்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு எதிரே செல்லும் வழியாக க.மாமனந்தல் கிராமம் 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இதனால், கள்ளக்குறிச்சிக்கு வந்து செல்வதற்கு, குறுகிய வழியாக 2 கி.மீ., தொலைவில் கோமுகி ஆற்றை கடந்து ரோடுமாமந்துார் வழியினை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், விவசாயிகள் தங்களது விளைபொருட்கள், செங்கல் போன்ற பல்வேறு பொருட்களை டிராக்டர் டிப்பர், டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் கோமுகி ஆற்றை கடந்து எடுத்துச் செல்கின்றனர்.
அதேபோல், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கிராம மக்கள் நடந்தும் அவ்வழியாக செல்கின்றனர். கரடு முரடாக உள்ள கோமுகி ஆற்றை கடக்கும் போது கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பருவ மழைக் காலங்களில் கோமுகி அணை திறக்கும்போது, ஆற்றில் தண்ணீர் செல்வதால் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள 5 கி.மீ., தொலைவு சாலை வழியாக நீண்ட துாரம் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் இச்சாலை வழியாக செல்ல அச்சமடைகின்றனர்.
கோமுகி ஆற்றில் குறைந்தளவு தண்ணீர் செல்லும் போது கிராம மக்கள் நீண்ட துாரம் சுற்றி செல்ல சிரமப்பட்டு, ஆற்றை கடந்து செல்வதில் முனைப்பு காட்டுகின்றனர். சில நேரங்களில் ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் செல்லும் போதும், ஆபத்தை உணராமல் ஆற்றைக் கடக்கின்றனர்.
இதனால், கா.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஒவ்வொரு சட்டசபை, லோக்சபா தேர்தலின் போதும் ஓட்டு கேட்க வருவோரிடம் உயர்மட்ட பாலம் கோரிக்கை தொடர்பாக கிராம மக்கள் தொடர்ந்து மனுவும் அளித்து வருகின்றனர்.
ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, கிராம மக்களின் பல ஆண்டுகள் கோரிக்கையான கா.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.