/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூஜை செய்வதாக பெண்களிடம் நகை பறித்த நபர் கைது
/
பூஜை செய்வதாக பெண்களிடம் நகை பறித்த நபர் கைது
ADDED : டிச 16, 2024 05:09 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த சொரையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு, 50; ஆடு மேய்த்து வருகிறார். இவரது கணவர் தேவராஜ் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
கடந்த 8ம் தேதி மாலை 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் வீட்டிற்கு வந்து, உனது கணவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. பூஜை செய்தால் சரியாகி விடும் எனக் கூறியுள்ளார்.
இதனை நம்பிய அலமேலு வீட்டில் பூஜை செய்ய அனுமதித்துள்ளார்.
பூஜையின்போது, அம்மனுக்கு தங்க நகை வைத்து பூஜிக்க வேண்டும் என கூறியதால், அலமேலு அணிந்திருந்த 2 கிராம் கம்மலை கழற்றிக் கொடுத்துள்ளார். பூஜை முடித்து மாலை 6:00 மணிக்கு வந்து தருவதாக நகையுடன் சென்றவர் மீண்டும் வரவில்லை.
இதுகுறித்து அலமேலு அளித்த புகாரின் பேரில், மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று சொரையப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில், கிருஷ்ணகிரி, காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் காளியப்பன், 41; எனவும் பூஜை செய்வதாக கூறி தனியாக இருக்கும் பெண்களிடம் நகையை பறித்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும், அலமேலுவிடம் நகையை பறித்துச் சென்ற வழக்கில் தேடப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காளியப்பனை கைது செய்து, ஒரு பைக், 3 சவரன் நகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.