15 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கும்... அவலம்!சின்னசேலத்தில் தீயணைப்பு நிலையம் கட்டப்படுமா?
15 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கும்... அவலம்!சின்னசேலத்தில் தீயணைப்பு நிலையம் கட்டப்படுமா?
UPDATED : ஜூலை 05, 2026 06:33 PM
ADDED : ஜூலை 05, 2026 06:12 PM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தீயணைப்பு நிலையத்திற்கு, சொந்த கட்டடம் இல்லாததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின் பகுதியில் போதுமான வசதிகளின்றி வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால், தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு பணிகளை விரைவாக செய்ய முடியாத நிலை உள்ளது. சின்னசேலம் பகுதியில் ஏற்படும் தீவிபத்துக்களை தடுப்பதற்கு, கள்ளக்குறிச்சியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் செல்ல வேண்டி இருந்ததால், அதிகளவில் தீ விபத்து சேதங்கள் ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் விதமாக தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் 16 தீயணைப்பு வீரர்களுடன் சின்னசேலத்தில் தீயணைப்பு கடந்த 2011ம் ஆண்டு புதிய தீயணைப்பு நிலையம் துவங்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் இந்த தீயணைப்பு நிலையம் மற்றும் அதற்கான ஷெட் வாடகை ஒப்பந்த அடிப்படையில் செயல்பட துவங்கியது. இதனால் இப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துகள் பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் துவங்கி 7 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இந்த தீயணைப்பு நிலையம் தொடங்கி 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கள்ளக்குறிச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலகம் செயல்பட்டு வந்தபோதிலும் சின்னசேலத்தில் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.
தற்போதுள்ள பழைய ஓட்டு கட்டடத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு போதுமான ஓய்வறை, மீட்பு உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் வைப்பதற்கும் போதிய இடவசதி இல்லாமல் தீயணைப்பு வீரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் ஏற்படும் திடீர் தீ விபத்துகளைத் தடுக்க தீத்தடுப்பு வாகனத்தில் தண்ணீர் நிரப்புவதற்கும் போதிய வசதிகள் எதுவும் இங்கு இல்லை. இதனால் சரியான நேரத்தில் தீ விபத்துகளை தடுக்கச் செல்வதிலும் தொய்வு ஏற்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர்கள் பணியில் இருந்தும் சின்னசேலத்தில் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வருவது இப்பகுதி மக்களை அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே சின்னசேலம் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்டி தீயணைப்பு வீரர்களின் பணிகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
