ADDED : ஜன 22, 2026 05:39 AM

ரிஷிவந்தியம்: மணலுார்பேட்டையில் ஆற்றுத்திருவிழாவின் போது நடந்த சிலிண்டர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை எம்.எல்.ஏ., சந்தித்து ஆறுதல் கூறினார்.
வாணாபுரம் அடுத்த மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் கடந்த 19ம் தேதி ஆற்றுத்திருவிழா நடந்தது. அப்போது, இரவு 7.15 மணியளவில் ஆஞ்சயநேயர் கோவில் அருகே பலுானில் காற்று நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ஹீலியம் சிலிண்டர் திடீரென வெடித்தது. இதில், 19 பேருக்கு கை, கால், கண், இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. உடன் அனைவரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், திருவண்ணாமலை மாவட்டம், வேங்கயவெல்லுார் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மனைவி கலா, 50; பரிதாபமாக உயிரிழந்தார்.
2 நபர்கள் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். திருவண்ணாமலை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களில் ரிஷிவந்தியம் தொகுதியை சேர்ந்த மூவருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். தொடர்ந்து, மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களை டாக்டர்களிடம் கேட்டறிந்து, தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தினார். அப்போது மணலுார்பேட்டை நகர செயலாளர் ஜெய்கணேஷ் உடனிருந்தனர்.

