/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உலர்களமாக மாறிய சர்வீஸ் சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி
/
உலர்களமாக மாறிய சர்வீஸ் சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி
உலர்களமாக மாறிய சர்வீஸ் சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி
உலர்களமாக மாறிய சர்வீஸ் சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 17, 2025 06:58 AM

கள்ளக்குறிச்சி: தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலைகள் உலர்களமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாய விளை பொருட்களை அடித்து உலர்த்தி காய வைக்க ஒவ்வொரு நிலத்தின் அருகிலும் களத்து மேடு என்ற பகுதியை உருவாக்கி வைத்திருந்தனர்.
பின், விவசாயிகளின் வசதிக்காக அரசே பொது இடத்தில் உலர் களங்களை அமைத்தது. தற்போது அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ள உலர் களங்கள், பல இடங்களில் சேதமாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அத்துடன் சில கிராமங்களில் போதிய அளவிற்கு உலர் களங்கள் அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலைகள், அகலம் மிகுதியான பயணிகள் நிழற்குடையின் சாலைகள் உலர்களமாக பயன்படுத்துகின்றனர்.
அதேபோல் பெரும்பாலான கிராமங்களில் சாலைகளே உலர்களமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காசோளம் நிலங்களில் தற்போது அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்காசோளத்தை வெயிலில் காயவைப்பதற்கு சாலைகளையே விவசாயிகள் உலர்களாக பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.
இரவில் விளை பொருட்களை சாலையிலேயே மூடி இருப்பு வைக்கின்றனர்.
அவ்வாறு பொருட்கள் மீது கருங்கற்களையும் அடுக்கி வைக்கின்றனர். இதனால் இரவில் சில நேரங்களில் விபத்து நேரிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, கிராமப்புறங்களில் உலர்களம் தொடர்பான விவசாயிகளின் தேவைகளை கேட்டறிந்து அமைத்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.