/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'இ-பைலிங்' முறைக்கு எதிர்ப்பு; வழக்கறிஞர்கள் 'கோர்ட்' புறக்கணிப்பு;; ஆயிரக்கணக்கான வழக்குகள் தேக்கம்
/
'இ-பைலிங்' முறைக்கு எதிர்ப்பு; வழக்கறிஞர்கள் 'கோர்ட்' புறக்கணிப்பு;; ஆயிரக்கணக்கான வழக்குகள் தேக்கம்
'இ-பைலிங்' முறைக்கு எதிர்ப்பு; வழக்கறிஞர்கள் 'கோர்ட்' புறக்கணிப்பு;; ஆயிரக்கணக்கான வழக்குகள் தேக்கம்
'இ-பைலிங்' முறைக்கு எதிர்ப்பு; வழக்கறிஞர்கள் 'கோர்ட்' புறக்கணிப்பு;; ஆயிரக்கணக்கான வழக்குகள் தேக்கம்
ADDED : டிச 15, 2025 05:38 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால் ஆயிரக்கணக்கான வழக்குகள் தேக்கமடைந்து மனுதாரர்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் 'இ- பைலிங்' என்ற டிஜிட்டல் நடைமுறை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அனைத்து வழக்குகளையும், சட்ட ஆவணங்களையும் மின்னணு முறையில் அனைத்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் நீதிமன்றங்களுக்கு நேரில் செல்லாமல் தங்களது இடத்திலிருந்தே, வழக்குகளை பதிவு செய்யலாம்.
குறிப்பாக 'காகிதமில்லா தாக்கல்' செய்யும் முறையை ஊக்குவிப்பதையும், நேர செலவையும் சேமிக்கவும், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் வகையிலும் 'இ-பைலிங்' முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக வழக்கறிஞர், மனுதாரர் இணையத்தில் பயனர் கணக்கை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த 'இ-பைலிங்' நடைமுறைக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதாவது, வழக்குகளை 'இ-பைலிங்' செய்ய தேவைப்படும் 'ஓ.சி.ஆர்., ஸ்கேனர்' விலை அதிகம், மாதந்தோறும் ஒருமுறை 'பாஸ்வேர்டு' மாற்ற வேண்டும், எதிர் தரப்பினருக்கு நோட்டீஸ் வழங்காமல் எந்த ஆவணத்தையும் பதிவேற்றம் செய்ய முடியாது, ஆன்லைனில் பதிவேற்றம் செய்த பிறகே அவசர வழக்கினை விசாரிக்க வேண்டிய நிலை, அனைத்து பகுதிகளிலும் 'இ-பைலிங்' செய்வதற்கேற்ப அதிவேக இணைய வசதி இல்லை உட்பட பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 'இ-பைலிங்' முறையை வாபஸ் பெறக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கடந்த 2ம் தேதியில் இருந்து 'கோர்ட்' புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் நடந்த 'லோக் அதாலத்'திலும் வழக்கறிஞர்கள் பங்கேற்கவில்லை.
நேற்று முன்தினம் காணொளி காட்சி மூலம் நடந்த வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், மறு அறிவிப்பு வரும் வரை நீதிமன்ற பணி விலகல் போராட்டம் தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் தொடர்ந்து 'கோர்ட்' புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக வழக்கறிஞர்கள் 'கோர்ட்' புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் ஆயிரக்கணக்கான வழக்குகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வழக்கில் தொடர்புடைய மனுதாரர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

