பகண்டை கூட்ரோட்டு - ரிஷிவந்தியத்திற்கு பஸ் இயக்க கோரிக்கை
பகண்டை கூட்ரோட்டு - ரிஷிவந்தியத்திற்கு பஸ் இயக்க கோரிக்கை
ADDED : மார் 09, 2026 03:16 AM
ரிஷிவந்தியம்: பகண்டை கூட்ரோடு பகுதியில் இருந்து கிராமப்புறங்கள் வழியாக ரிஷிவந்தியத்திற்கு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரிஷிவந்தியத்தில் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில், போலீஸ் ஸ்டேஷன், வங்கிகள், அரசு பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும், ரிஷிவந்தியத்தில் புதிதாக பி.டி.ஓ., அலுவலகம் இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது.
பி.டி.ஓ., அலுவலகம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, லா.கூடலுார், அவிரியூர், மேலப்பழங்கூர் உட்பட தொலைவில் உள்ள 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக ரிஷிவந்தியத்திற்கு செல்ல நேரிடும். ஆனால் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ரிஷிவந்தியத்திற்கு செல்ல போதுமான பஸ்வசதி இல்லை.
எனவே, பகண்டைகூட்ரோட்டில் இருந்து அருகாமையில் உள்ள கிராமப்பகுதிகள் வழியாக ரிஷிவந்தியத்திற்கு சென்று வர பஸ் இயக்க வேண்டும். அதேபோல், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் பகுதியில் இருந்து ரிஷிவந்தியத்திற்கு கூடுதல் பஸ் இயக்கிட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
