பனை மரத்திலிருந்து தவறி விழுந்த பிளஸ் 2 மாணவர் பலி
பனை மரத்திலிருந்து தவறி விழுந்த பிளஸ் 2 மாணவர் பலி
ADDED : ஏப் 29, 2026 05:27 AM
கச்சிராயபாளையம்: எலியத்துார் கிராமத்தில் பனை மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கச்சிராயபாளையம் அடுத்த எலியத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் பிரவீன்குமார், 17; இவர் தொட்டியம் அரசு பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு கோடை விடுமுறையில் வீட்டிலிருந்தார்.
பிரவீன்குமார் கடந்த 23ம் தேதி பகல் 2 மணி அளவில் தனது நண்பர்களுடன் வயல் வெளியில் நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தின் மீது ஏறினார். அப்போது நிலை தடுமாறி பிரவீன்குமார் மரத்திலிருந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் நேற்று முன்தினம் இறந்தார்.
இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
