/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அணைக்கட்டில் இருந்து ஏரிகளுக்கு நீர்வரத்துக்கு சிக்கல்: கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
அணைக்கட்டில் இருந்து ஏரிகளுக்கு நீர்வரத்துக்கு சிக்கல்: கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
அணைக்கட்டில் இருந்து ஏரிகளுக்கு நீர்வரத்துக்கு சிக்கல்: கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
அணைக்கட்டில் இருந்து ஏரிகளுக்கு நீர்வரத்துக்கு சிக்கல்: கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஏப் 04, 2025 04:38 AM

சேலம் மாவட்டம், பெரியேரி ஊராட்சியில் உள்ள வஜிஸ்டா நதியின் குறுக்கே பாக்கம்பாடி அணைக்கட்டு உள்ளது. இங்கிருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சுற்று வட்டார பகுதியில், 10 கிராமங்களை சேர்ந்த, 16 ஏரிகளுக்கும், கடலுார் மாவட்டத்தில், 9 ஏரிகளுக்கும் நீர் வரத்து ஏற்படும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
பருவ மழை காலங்களில் இந்த அணைக்கட்டிலிருந்து அனைத்து ஏரிகளுக்கும் நீர் வரத்து ஏற்பட்டு முழுமையாக நிரம்பும் பட்சத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வாய்ப்புள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், 'பெஞ்சல்' புயலின் போது பெய்த கனமழையில், பாக்கம்பாடி அணைக்கட்டில் நீர் தேக்கம் ஏற்பட்டது. ஆனால், அங்கிருந்து இருந்து செல்லக்கூடிய நீர் வரத்து கால்வாய்கள் முறையான பராமரிப்பின்றி பல இடங்களில் துார்ந்து போய் இருப்பதால், ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, காளசமுத்திரம், தாகம் தீர்த்தாபுரம், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி உள்ளிட்ட, 5 க்கும் மேற்பட்ட கிராம ஏரிகளுக்கான நீர் வரத்து கால்வாய் துார்ந்த நிலையில், புற்செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது.
சில இடங்களில் கால்வாய் மேடுபகுதியாகவும் இருக்கிறது. இதனால் கால்வாய்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஆண்டுதோறும் கோடை காலங்களில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக, அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அனைத்து ஏரிகளிலும் முழுமையாக தண்ணீர் நிரம்பும் பட்சத்தில், விவசாய நிலங்கள் மற்றும் கிராம பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வாக அமைய வாய்ப்புள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அணைக்கட்டு மூலம் நீர் வரத்து ஏற்படும் ஏரிகளின் கால்வாய்களில், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இனி வரும் காலங்களில், சின்னசேலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படும் வகையில், கால்வாய்களின் சீரமைப்பு பணிகளை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும், என்றனர்.