தெப்பக்குளம் செல்லும் பாதாள கால்வாய் சீரமைக்க திட்டம்:திருக்கோவிலுாரில் ஐ.ஐ.டி., குழுவினர் நேரில் ஆய்வு
தெப்பக்குளம் செல்லும் பாதாள கால்வாய் சீரமைக்க திட்டம்:திருக்கோவிலுாரில் ஐ.ஐ.டி., குழுவினர் நேரில் ஆய்வு
UPDATED : ஜூலை 27, 2026 03:22 PM
ADDED : ஜூலை 27, 2026 03:00 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தெப்ப குளத்திற்கு பழமையான பாதாள கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். திருக்கோவிலுார் நகரில் நீர் மேலாண்மையை மேம்படுத்த அரசர்களால் உருவாக்கப்பட்ட தெப்பகுளம், தீர்த்த குளங்கள் உள்ளது. இதற்கு பெரிய ஏரியிலிருந்து தண்ணீர் சென்று நிரம்பும் வகையில் பாதாள கால்வாய் வசதி செய்யப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வந்தால் வாய்க்கால் வழியாக ஏரிக்கு தண்ணீர் வரும். ஏரியில் உள்ள மதகைத் திறந்தால், பாதாள கால்வாய் வழியாக குளங்கள் நிரம்பும். இதன் மூலம் நகரின் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டு, வீடுகளில் அமைக்கப்பட்டு இருக்கும் கிணறுகளில் தண்ணீர் நிரம்பும்.
நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த பாதாள கால்வாய் ஒன்றரை அடி அகலம், இரண்டரை அடி உயரம் கொண்டது. பெரிய ஏரியில் இருந்து இரட்டை விநாயகர் கோவில், தெற்கு வீதி வழியாக 500 மீட்டர் துாரத்தில் உள்ள தெப்ப குளத்திற்கு செல்கிறது. இந்த கால்வாய் செதுக்கப்பட்ட கருங்கற்களால் கீழ்பகுதி, சைடு கற்கள், மேற்பகுதி சுண்ணாம்பு கலவை கட்டுமானத்தால் மூடப்பட்டுள்ளது. 5க்கும் மேற்பட்ட இடங்களில் நீள் செவ்வக வடிவ தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் கருங்கல் பலகையால் மூடப்பட்டுள்ளது.
கால்வாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் கருங்கல் பலகையை எடுத்துவிட்டு தேங்கி இருக்கும் மண்ணை வெளியேற்றுவதன் மூலம் கால்வாய் அடைப்பு முழுவதுமாக சீரடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழமையும், பெருமையையும் பறைசாற்றும் இக்கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மண் துார்ந்து குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதை அடைபட்டது.
இதனால் குளம் வறண்டது. இதனை சீரமைக்கும் பணி இந்து சமய அறநிலைத்துறை ஏற்பாட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. பாதாள கால்வாயை தவிர்த்து, புதிதாக குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணி துவங்கப்பட்டது. இதற்கு பக்தர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்நிலையில் உலகளந்த பெருமாள் கோவில் நிர்வாகி கோலாகலன் சென்னை ஐ.ஐ.டி., நிர்வாகத்தை அணுகினார். அதனைத் தொடர்ந்து, ஐ.ஐ.டி., மேற்பார்வையில் இயங்கும் 'சொலினாஸ் சின்டெகரேட்டட் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தினர் நேற்று பாதாள கால்வாயை ஆய்வு செய்தனர்.
ஜே.சி.பி., மூலம் தெற்கு வீதியில் 4 இடங்களில் பள்ளம் தோண்டி எத்தனை அடி ஆழத்தில் பாதாள கால்வாய் அமைந்துள்ளது, அதில் படித்திருக்கும் மண்ணின் தன்மை, மண் சேமிக்கும் தொட்டிகள் அமைந்திருக்கும் இடங்கள் என சர்வீஸ் இன்ஜினியர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து சர்வீஸ் இன்ஜினியர் சதீஷ்குமார் கூறுகையில், 'பாதாள கால்வாயின் அகலம், ஆழம், அதில் எப்படியான அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அடைப்பை ரோபோட்டிக் இயந்திரம் மற்றும் எந்த மாதிரியான சாதனங்களைக் கொண்டு சீரமைக்கலாம். சீரமைக்க முடியாத நிரந்தர அடைப்பு இருக்கும் இடங்களை கண்டறிந்தால் அதனை மாற்று வழியில் எவ்வாறு எடுத்துச் செல்லலாம் என்பது குறித்து விரிவான அறிக்கை தயாரித்து நிறுவனத்திடம் வழங்கப்படும்.
அதன் அடிப்படையில் சீரமைப்பு பணி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொள்ளும். சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பெரு நகரங்களில் உள்ள குடிநீர் குழாய் சீரமைப்பு பணி உள்ளிட்ட சவாலான பணிகளை எங்கள் நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பாதாள கால்வாய் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.
சென்னை ஐ.ஐ.டி., மேற்பார்வையில் இயங்கும் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் என்பதால், புராதான கால்வாய் புனரமைக்கப்பட்டு, ஏரியிலிருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் பழமை மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
