ADDED : அக் 09, 2024 04:09 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள மீன் அங்காடியை அகற்றிட வேண்டும் என அப்பகுதி குடியிருப்புவாசிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சி, 9 மற்றும் 10வது வார்டு பொது மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: கோவில்கள், பள்ளி வாசல், குடியிருப்புகள், உழவர் சந்தை, பஸ் நிலையம் ஆகிய பொது மக்கள் அதிகம் கூடும் இடத்தில் புதிதாக மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கழிவுநீர், கழிவறை ஆகியவற்றால் ஏற்படுகின்ற துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகிறோம். இந்நிலையில் இப்பகுதியிலேயே மீன் மார்க்கெட்டும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பஸ் நிலையம், உழவர் சந்தைக்கு வருபவர்களின் வாகனங்களால் எங்கள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டை அகற்றிட வேண்டும் என, மனுவில் தெரிவித்துள்ளனர்.
