போக்கு வரத்து நெரிசலால் கடும் அவதி: பொது மக்கள் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை தேவை
போக்கு வரத்து நெரிசலால் கடும் அவதி: பொது மக்கள் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை தேவை
UPDATED : செப் 16, 2026 06:03 PM
ADDED : செப் 16, 2026 03:11 PM
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் போக்கு வரத்து நெரிசலால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்களின் முக்கிய தேவைகளுக்காக கச்சிராயபாளையம் வந்து செல்கின்றனர். மேலும் கச்சிராயபாளையத்தில் இருந்து சென்னை, சேலம், திருச்சி, பெரம்பலுார், கடலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கச்சிராயபாளையம் சுற்றுபுற பகுதி மற்றும் கல்வராயன்மலை பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சி செல்வதற்கு கச்சிராயபாளையம் வழியாகவே செல்ல வேண்டி உள்ளது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளிலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு கச்சிராயபாளையம் வழியாக தினமும் நுாற்றுகணக்கான டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.
சென்னை, சேலம், கடலுார் உட்பட பல பெரும் நகரங்களுக்கும் புறநகர் பஸ்களும் கச்சிராயபாளையம் வழியாக இயக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், தலைவாசல், ஆத்துார், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளிலிருந்தும் தினமும் 200 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாணவர்களை அழைத்து செல்கின்றனர்.
கச்சிராயபாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு நெல், கரும்பு, வாழை, மக்காசோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். மேலும் கச்சிராயபாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது.
ஆலை இயக்கப்படும் நேரத்தில் தினமும் ஆயிரங்கணக்கான கரும்பு லோடு டிராக்கடர்கள் கச்சிராயபாளையம் , காமராஜர் சாலை வழியாக செல்கின்றன. மேலும் கல்வராயன்மலை மற்றும் கச்சிராயபாளையம் பகுதியில் அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள் சேலம் மாவட்டத்தில் இயங்கும் ஜவ்வரசி ஆலைகளுக்கு லாரிகளில் எடுத்து செல்கின்றனர். மேலும் இங்கு அறுவடை செய்யப்படும் நெல் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.
இதனால் நுாற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் மற்றும் லோடு எடுத்து செல்லும் லாரிகள் மற்றும் கரும்பு டடிராக்டர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் கச்சிராயபாளையம் காமராஜர் சாலை வழியாக செல்ல வேண்டி நிலை உள்ளது. மேலும் வாரந்தோறும் கச்சிராயபாளையம் புதிய பஸ் நிலையத்தில் வாரச்சந்தை நடந்து வருகிறது.
கச்சிராயபாளையம் காமராஜர் சாலை மற்றும் எல். எப்., சாலை ஆகியவை காவல் நிலையம் அருகே துவங்கி அம்மாபேட்டை வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் கடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக லோடு வாகனங்கள் செல்லும் நேரங்களில் மிகுந்த போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் கச்சிராயபாளையம் பகுதியில் இயங்கும் கடைகளுக்கு பொருட்கள் மற்றும் சிமெண்ட் லோடு இறக்கும் போது அதிகளவில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலை ஓரங்களில் தாறுமாறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களாலும் பொது மக்கள் நடந்து செல்லவும் இடமின்றி டிராபிக்ஜாம் ஏற்படுவதும் வழக்கமாகியுள்ளது. சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் பைக்குகளை ஒழுங்கு படுத்த கச்சிராயபாளையம் காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை சார்பில் பலமுறை அளவீடு செய்யும் பணிகள் நடத்தப்பட்டு அதனை அகற்ற குறியும் (மார்க்கிங்) செய்யும் பணிகளும் நடந்தது. வழக்கம் போல் அதிகாரிகளின் மெத்த போக்கினால் ஆக்கிரமிப்புகளை அகற்ற இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கச்சிராயபாளையம் காமராஜர் சாலையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கச்சிராயபாளையம் காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலபடுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
