ADDED : ஜூன் 07, 2025 01:32 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்காத திடக்கழிவுகள் சேகரிப்பு மையத்தை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் துாய்மை மிஷன் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் தனித்தனியாக தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. இதை முறையாக தரம் பிரித்து அகற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்காத மறுசுழற்சிக்கு பயன்படும் மற்றும் மறுசுழற்சிக்கு பயன்படாத திடக்கழிவுகளை சேகரிக்கும் மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அங்குள்ள அனைத்து பிரிவு அலுவலர்களும், தினசரி உருவாகும் மக்காத திடக்கழிவுகளை தரம் பிரித்து, சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மையத்தினை அனைத்து அலுவலர்களும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, நகராட்சி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
