/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் உயர்மட்ட பாலம் கட்ட அளவிடும் பணி
/
திருக்கோவிலுாரில் உயர்மட்ட பாலம் கட்ட அளவிடும் பணி
திருக்கோவிலுாரில் உயர்மட்ட பாலம் கட்ட அளவிடும் பணி
திருக்கோவிலுாரில் உயர்மட்ட பாலம் கட்ட அளவிடும் பணி
ADDED : அக் 27, 2024 11:23 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தரைப் பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற அளவிடும் முதல் கட்ட பணி துவங்கியது.
திருக்கோவிலுார், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருக்கோவிலுார் - அரகண்டநல்லுாரையும் இணைக்கும் வகையில் தரைப்பாலம் உள்ளது. 100 ஆண்டுகள் பழமையான இப்பாலம் அவ்வப்பொழுது சீரமைத்தாலும் ஒவ்வொரு ஆண்டின் வெள்ளப் பெருக்கின் போதும் சேதமடையும்.
இதன் காரணமாக உயர்மட்ட பாலமாக கட்டக் கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு கடந்த அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுத்து டெண்டர் விடும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் மா.கம்யூ., சார்பில் திருக்கோவிலுார் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து வழக்கம் போல் நில எடுப்பு தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மீண்டும் அளவீடு செய்ய துவங்கியுள்ளனர்.
இதற்கு முன்னர் பலமுறை அளவீடு செய்ததைப் போன்ற வழக்கமான காலம் கடத்தும் நடைமுறைதான் இது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் எழிலரசன் கூறுகையில், 'தரைபாலத்தினை உயர்மட்ட பாலமாக கட்ட 100 கோடி ரூபாய் மதிப்பீடு தயார் செய்து, கருத்துருக்கள் அரசின் ஒப்புதலுக்காக நெடுஞ்சாலை துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருவண்ணாமலை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் நாகராஜன் அறிவுறுத்தலின்படி, உதவி கோட்ட பொறியாளர் அனிதா தலைமையில் உயர்மட்ட பாலப் பணிகள் நடைபெறுவதற்கு தேவைப்படும் நில எடுப்பு தொடர்பான ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கியுள்ளது' என்றார்.