/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டடம் தேவை! சின்னசேலத்தில் போதிய வசதி இல்லாமல் அவதி
/
தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டடம் தேவை! சின்னசேலத்தில் போதிய வசதி இல்லாமல் அவதி
தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டடம் தேவை! சின்னசேலத்தில் போதிய வசதி இல்லாமல் அவதி
தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டடம் தேவை! சின்னசேலத்தில் போதிய வசதி இல்லாமல் அவதி
ADDED : பிப் 21, 2024 10:15 PM
கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்தில் போதிய இட வசதிகள் இல்லாமல் வீரர்கள் அவதியடைந்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சொந்த கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சின்னசேலம் பகுதியில் ஏற்படும் தீவிபத்துக்களை தடுப்பதற்கு, கள்ளக்குறிச்சியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் செல்ல வேண்டி இருந்ததால், சின்னசேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தீவிபத்தின் போது அதிகளவில் சேதங்கள் ஏற்பட்டு வந்தது.
இவற்றை தடுக்கும் பொருட்டு சின்னசேலத்தில் புதிய தீணைப்ப நிலையம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து தீயணைப்ப நிலைய அலுவலர் மற்றும் 16 தீயணைப்பு வீரர்களுடன் சின்னசேலத்தில் தீயணைப்பு நிலையம் கடந்த 2011 ம் ஆண்டு புதிய தீயணைப்பு நிலையம் துவங்கப்பட்டது. பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் இந்த தீயணைப்பு நிலையம் வாடகை கட்டடத்தில் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட துவங்கியது.
இதனால் இப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துகள் பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தீயணைப்பு நிலையம் தொடங்கி 13 ஆண்டுகள் ஆகியும், இதற்கென சொந்த கட்டடம் கட்டுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. தற்போதுள்ள வாடகை கட்டடத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு போதுமான ஓய்வு அறை, மீட்பு உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் வைப்பதற்கும் போதிய இடவசதி இல்லை.
தீடீர் தீ விபத்து ஏற்படும்போது வாகனத்தில் தண்ணீர் நிரப்புவதற்கும் போதிய வசதிகள் எதுவும் அங்கு இல்லை. இதனால் இங்கு பணியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் வெகுவாக பாதிப்படைந்து வருகின்றனர்.
மேலும் கள்ளக்குறிச்சி பகுதியில் ஏற்படும் பெரும் தீவிபத்து காலங்களில் சின்னசேலம் தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போதுமான வசதிகள் இல்லாமல் இயங்கும் தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தும் சின்னசேலத்தில் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வருவது இப்பகுதி மக்களை அதிருப்தி அடைய செய்து வருகிறது. எனவே சின்னசேலம் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.