/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி தொகுதியில் மும்முனை போட்டி! வேட்பாளர்கள் யார் என எதிர்பார்ப்பு
/
கள்ளக்குறிச்சி தொகுதியில் மும்முனை போட்டி! வேட்பாளர்கள் யார் என எதிர்பார்ப்பு
கள்ளக்குறிச்சி தொகுதியில் மும்முனை போட்டி! வேட்பாளர்கள் யார் என எதிர்பார்ப்பு
கள்ளக்குறிச்சி தொகுதியில் மும்முனை போட்டி! வேட்பாளர்கள் யார் என எதிர்பார்ப்பு
ADDED : மார் 19, 2024 10:42 PM
திருக்கோவிலுார் : கள்ளக்குறிச்சி தொகுதியில் வாகை சூடப்போவது தி.மு.க.,வா? அ.தி.மு.க.,வா? என்ற கேள்வியுடன் மும்முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது.
சவாலான கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில், கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில், வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு பிரதான கட்சிகளாக இருக்கும் தி.மு.க., அ.தி.மு.க., மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.
காரணம் தொகுதி மறு சீரமைப்பிற்கு பிறகு நடந்த லோக்சபா தேர்தல்களில் தி.மு.க., இரண்டு முறையும், அ.தி.மு.க., ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்துார் , ஏற்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் தொகுதிகளை உள்ளடக்கியது கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி. இதில் சேலம் மாவட்டத்தில் மூன்று சட்டசபை தொகுதியையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியும் அ.தி.மு.க., வசம் உள்ளது.
கள்ளக்குறிச்சியை கைப்பற்றியே ஆக வேண்டிய கட்டாய சூழலுக்கு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தள்ளப்பட்டு இருக்கிறார். காரணம் அவரது சொந்த மாவட்டத்தில் மூன்று சட்டசபை தொகுதிகள் வருவதால் இதனை அவர் கவுரப் பிரச்னையாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அத்துடன் நான்கு சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க., வசம் இருப்பதால் தேர்தல் வியூகத்தை திறம்பட செயல்படுத்தினால் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என நம்புகிறார் பழனிசாமி.
அதே வேளையில் தி.மு.க., சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவது, கடந்த லோக்சபா தேர்தலில் செயல்பட்ட அதே யுக்தியை பயன்படுத்துவது, மகளிருக்கான உரிமை தொகை ஆயிரம் வழங்கியதில் மகளிரின் ஆதரவு உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் தங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும் என நம்புகின்றனர்.
மேலும் கடந்த முறையை காட்டிலும் எதிரணியின் போட்டி களம் கூட்டணியை வைத்துப் பார்த்தால் பலம் குறைவாக இருப்பதால் வெற்றி பெறுவது சுலபம். என்றாலும் பெரிய அளவிலான பாதகமும் இருக்கத்தான் செய்கிறது.
தி.மு.க., எம்.பி., கவுதமசிகாமணி தான் கொடுத்த வாக்குறுதியில் பெரும்பாலானவை நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி ஒரு பக்கம் இருந்தாலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் சட்டசபை தொகுதிகளில் எம்.பி., பதவியை முழுமையாக செயல்படுத்த முடியாத அளவிற்கு சொந்த கட்சியிலேயே எதிரணியினரால் முடக்கி வைக்கப்பட்டார்.
அதே வேளையில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் மூன்று சட்டசபை தொகுதிகளும் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.
தி.மு.க., தலைமை எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றுவது போல் கோஷ்டி பூசலுக்கு துாபம் போட்டது அவர்களுக்கே பாதகமாக அமைந்துள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் மூன்று சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகளும் விரக்தியில் உள்ளனர்.
தற்பொழுது அவரையே வேட்பாளராக அறிவித்தால் சொந்தக் கட்சியில் இருக்கும் எதிரணியினர் இவருடன் இணக்கமாக இருந்து தேர்தல் பணியாற்றுவார்களா என்ற கேள்வியும் எழுகிறது. வேறு வேட்பாளரை அறிவித்தாலும் கோஷ்டி பூசல் சரியாகிவிடுமா என்ற சந்தேகமும் உள்ளது.
இதன் காரணமாக கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., விற்கு சவாலான தொகுதியாகவே கருதப்படுகிறது.
அதே வேளையில் அ.தி.மு.க., வை பொருத்தவரை பண பலம் படைத்த வேட்பாளர்கள் கிடைப்பார்களா? கூட்டணியில் தே.மு.தி.க., சேருமா என்ற சந்தேகத்தில் கட்சித் தலைமை இருப்பதுடன், கூட்டணி பலம் இல்லாததால் கூட்டம் சேருமா என்ற சந்தேகம் அ.தி.மு.க., வினர் மத்தியில் பலவீனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே அவர்களுக்கும் இது போட்டி நிறைந்த தொகுதியாகவே இருக்கும்.
மூன்றாவது அணியாக உருவெடுத்து இருக்கும் பா.ஜ., வில் இத்தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும், தி.மு.க., அ.தி.மு.க., மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை பா.ஜ., அணியில் பலமான வேட்பாளர் நிறுத்தப்பட்டு விட்டாள் ஏற்படும் மும்முனைப் போட்டியில் சாதகம் யாருக்கு என்பது கூட்டணிப் பேச்சுவார்த்தை நிறைவடைந்து வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகு தெரியவரும். கள்ளகுறிச்சி தொகுதியில் மும்முனை போட்டியில் தி.மு.க.,. அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,கூட்டணியில் வேட்பாளர்கள் யார் என அரசியல் கட்சியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

