மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : மே 26, 2026 05:13 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான பயிற்சி நடந்தது.
தமிழ்நாட்டில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறை கணக்கெடுப்பு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் மூலம் தங்களது விபரங்களை தெரிவிக்கும் சுய கணக்கெடுப்பு வரும் ஜூலை 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது.
கணக்கெடுப்பாளர் மூலம் வீடுகள் தோறும் மேற்கொள்ளப்படும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.
இந்த பணிகளுக்கு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பொறுப்பு அலுவலர்களாக 7 தாசில்தார்கள், 3 நகராட்சி கமிஷனர்கள், 5 பேரூராட்சி செயல் அலுவலர்கள், 9 ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் செயல்பட உள்ளனர். இவர்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்பு நேற்று துவங்கி, வரும் 27ம் தேதி வரை நடக்கிறது.
கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பயிற்சியை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.
டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங், சி.இ.ஓ., கார்த்திகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனலட்சுமி மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
