/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவர்களை உயர்த்திய உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
/
மாணவர்களை உயர்த்திய உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
மாணவர்களை உயர்த்திய உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
மாணவர்களை உயர்த்திய உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
ADDED : ஆக 31, 2025 04:04 AM

உளுந்துார்பேட்டை: தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது உளுந்துார்பேட்டை (இந்து) பஞ்சாயத் யூனியன் நடுநிலைப்பள்ளி என கடந்த 1926ம் ஆண்டு துவங்கப்பட்டு, உள்ளூர் அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. கடந்த 21.6.1951ம் தேதி உயர்நிலைப் பள்ளியாகவும், 1.7.1978ம் தேதி மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் உ.கீரனுார் எல்லையில் 5.43 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பள்ளியில், 2.43 ஏக்கர் பரப்பளவில் பள்ளிக் கட்டடங்களும், 3 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளது.
இப்பள்ளிக்காக நடேசன் செட்டியார், முத்துலிங்க படையாட்சி, கந்தசாமி படையாச்சி, வெங்கடாசலம் படையாட்சி ஆகியோர் நிலத்தை நன்கொடையாக வழங்கினர். இதனால் முத்துலிங்க படையாட்சி உயர்நிலைப்பள்ளி என அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் காலப்போக்கில் அவை மாற்றப்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியர்கள் நன்கு கற்பித்ததால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளியில் சேர்ந்து படித்து வந்தனர்.
இப்பள்ளியில் படித்த மாணவர்கள் அரசு உயர் அதிகாரியாகவும், அரசியல் பிரமுகர்களாக உள்ளனர். இஸ்ரோ முன்னாள் இணை இயக்குனர் ஆரவமுதன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி, பி.எஸ்.என்.எல்., முதன்மை பொறியாளர் தமிழன்மணி, இந்து சமய அறநிலை துறை முன்னாள் தலைமை ஆணையர் குணசேகரன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அய்யாதுரை, தமிழ்நாடு கதர் வாரிய முன்னாள் தலைவர் சந்திரசேகரன், ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ., அதிகாரி ரகோத்தமன், திரைப்பட பாடலாசிரியர் சண்முகம், உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, தைவான் நாட்டின் தலைமை விஞ்ஞானி தெய்வீகன், இந்தியன் வங்கி முன்னாள் பொது மேலாளர் கோவிந்தராஜன், சென்னை துணை கமிஷனர் அருள், அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துறை தலைவர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., கள் குமரகுரு, திருநாவுக்கரசு, மணி, அங்கமுத்து, தற்போதைய எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், அரசு போக்குவரத்து பணிமனை முன்னாள் கிளை மேலாளர் ஆதிஅண்ணாமலை, நல்லாசிரியர் விருது பெற்ற சீராள சிவப்பிரகாசம், ராஜமாணிக்கம் என பலர் உயர் பதவிகளில் இருந்துள்ளனர்.
சில முன்னாள் மாணவர்கள் இணைந்து, முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி மூலம் பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக டேனியல்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியராக லட்சுமி கார்த்திகாயாயினி உள்ளனர்.
இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டில் அதிகம் ஆர்வம் காட்டி வருவதால், ஆண்டு தோறும் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க பள்ளியில் 579 மாணவர்களும், 39 ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்திற்கு அருகே இப்பள்ளி அமைந்துள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக உள்ளது. மாணவர்களின் எதிர்கால நிலையை உயர்த்திய பெருமைமிகு பள்ளியாக இருந்து வருகிறது.

