/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விரைவில் கள்ளக்குறிச்சியில் பாதாள சாக்கடை... ரூ.181.61 கோடி நிதி ஒதுக்கீடு
/
விரைவில் கள்ளக்குறிச்சியில் பாதாள சாக்கடை... ரூ.181.61 கோடி நிதி ஒதுக்கீடு
விரைவில் கள்ளக்குறிச்சியில் பாதாள சாக்கடை... ரூ.181.61 கோடி நிதி ஒதுக்கீடு
விரைவில் கள்ளக்குறிச்சியில் பாதாள சாக்கடை... ரூ.181.61 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : நவ 06, 2024 07:59 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ள 181.61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சி 21 வார்டுகளைக் கொண்டுள்ளது. 15.87 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட நகராட்சியில் 18 ஆயிரத்து 490 குடியிருப்புகள் உள்ளது. 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
தற்போது, மாவட்ட தலைநகரமாக இருப்பதால் நகரம் விரிவாக்கம் அடைவதுடன் ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நகரில் உருவாகும் கழிவு நீரை முறையாக வெளியேற்றும் வகையில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் மழைக் காலங்களில் சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடும் அவலம் உள்ளது.
குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், தியாகதுருகம் சாலையோரம் உள்ள கால்வாய் வழியாகச் சென்று கோமுகி ஆற்றில் கலக்கிறது. அதேபோல் வ.உ.சி., நகர், ராஜா நகர், எம்.ஜி.ஆர்., நகர், கேசவலு நகர் உள்ளிட்ட பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சித்தேரியில் கலக்கிறது. எம்.ஆர்.என்., நகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கழிவு நீர் தென்கீரனுார் ஏரிக்கு சென்று தேங்குகிறது.
மழைக் காலங்களில் கோமுகி அணை நிரம்பும் பட்சத்தில், ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு சில கிராமங்களில், ஆற்றில் போர்வெல் அமைத்து குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆற்றின் தடுப்பணைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை பொதுமக்கள் பலர் துணிகள் துவைப்பது, குளிப்பது போன்ற பல்வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
ஆற்றில் கழிவு நீருடன் கலந்து செல்லும் தண்ணீரால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது. ஆறு மற்றும் ஏரியில் கழிவு நீர் தேங்குவதை தடுக்க பாதாள சக்கடை திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் மூலம் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றும் பொருட்டு முதல்வர் ஸ்டாலின் 181.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதில் 153.86 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவும், 10 ஆண்டுகள் கழிவு நீர் சுத்திகரிப்பு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 20.93 கோடி ரூபாயும், கழிவு நீர் சேகராகும் அமைப்புகளை 5 ஆண்டுகள் பராமரிக்க 6.84 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 14 ஆயிரத்து 79 குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை வரும் காலங்களில் அதிகரிக்கும். இத்திட்டப் பணிகள் முழுமையாக முடிந்து, செயல்படுத்துவதின் மூலம் நகராட்சி பகுதியில் சுகாதாரம் மேம்படும்.

