ADDED : ஜன 30, 2026 07:20 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். வட்ட தலைவர் தனபால் முன்னிலை வகித்தார்.
செயலாளர் ஞானபிரகாஷ், பொருளாளர் சாதிக்பாஷா மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கிராம நிர்வாக அலுவலகத்தை குடிநீர், கழிவறை மற்றும் இணையதள வசதியுடன் கூடிய நவீனமயமாக்கப்பட்ட அலுவலகமாக அமைக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களின் டி.என்.பி.எஸ்.சி., நேரடி நியமன முறையில் கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க வேண்டும்.
10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர் என்றும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்புநிலை கிராம நிர்வாக அலுவலர்கள் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கல்வராயன்மலை, சின்னசேலம், சங்கராபுரம், வாணாபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகங்களிலும் போராட்டம் நடந்தது.

