குடிநீர் பிரச்னை : காலி குடங்களுடன் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
குடிநீர் பிரச்னை : காலி குடங்களுடன் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : ஆக 07, 2025 11:40 PM

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே முறையாக குடிநீர் வழங்காததால் காலி குடங்களுடன் பெண்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் பகுதியில் மேட்டு தெரு, மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. இது குறித்து அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை 11.30 மணியளவில் திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் மற்றும் பி.டி.ஓ., அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் நேற்று மதியம் 1:00 மணியளவில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
