/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அறுவடைக்கு தயாரான தர்பூசணி பழங்கள் ஆலங்கட்டி மழையால் உடைந்து சேதம்
/
அறுவடைக்கு தயாரான தர்பூசணி பழங்கள் ஆலங்கட்டி மழையால் உடைந்து சேதம்
அறுவடைக்கு தயாரான தர்பூசணி பழங்கள் ஆலங்கட்டி மழையால் உடைந்து சேதம்
அறுவடைக்கு தயாரான தர்பூசணி பழங்கள் ஆலங்கட்டி மழையால் உடைந்து சேதம்
ADDED : மே 05, 2025 11:58 PM

ஆலங்கட்டி மழை பெய்ததால் ரிஷிவந்தியம் அருகே ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த தர்பூசணி பழங்கள் உடைந்து சேதமடைந்தன.
தர்பூசணியில் வரிக்காய் மற்றும் ஐஸ் பாக்ஸ் என 2 ரகங்கள் உள்ளன. ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் பலர் 2 ரக தர்பூசணி பழங்களையும் பயிரிட்டிருந்தனர்.
இதில், மேலப்பழங்கூர் எல்லைக்குட்பட்ட அய்யனார்பாளையம் மற்றும் எகால் கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பழங்கள் நன்கு வளர்ந்து, ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் தர்பூசணி பழங்கள் விளை நிலத்திலேயே உடைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'ஒரு ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிரிட்டு, பராமரிக்க 60 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. 65 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.
தற்போதைய நிலவரப்படி வியாபாரிகள் ஒரு கிலோ 8 முதல் 10 ரூபாய் வரை கேட்டு, பறித்துச் செல்கின்றனர். இந்த விலைக்கு விற்பனை செய்தாலே நஷ்டம் ஏற்படும். ஆனால், திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பழங்கள் உடைந்துள்ளன. இதனால், சேதமடைந்த பழத்திற்கு அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்' என்றனர்.
தகவலறிந்த தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் முருகன் மற்றும் அதிகாரிகள் விளைநிலங்களுக்குச் சென்று, சேதமடைந்த பழங்களை பார்வையிட்டனர்.