ADDED : செப் 28, 2025 03:53 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜை, 6:45 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளினார்.
காலை 11:30 மணிக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
மூலவர் உலகளந்த பெருமாள் கல்பதித்த சங்கு சக்கரம், கர்ண பத்திரம், காசு மாலை, மாங்காய் மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் அருள் பாலித்தார். மாலை 6:00 மணிக்கு சுவாமி ஊஞ்சல் சேவை நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகளன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.