/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அருங்காட்சியகத்திற்கு சொந்த கட்டடம் எப்போது? தொல்லியல்துறையின் நடவடிக்கை தேவை
/
அருங்காட்சியகத்திற்கு சொந்த கட்டடம் எப்போது? தொல்லியல்துறையின் நடவடிக்கை தேவை
அருங்காட்சியகத்திற்கு சொந்த கட்டடம் எப்போது? தொல்லியல்துறையின் நடவடிக்கை தேவை
அருங்காட்சியகத்திற்கு சொந்த கட்டடம் எப்போது? தொல்லியல்துறையின் நடவடிக்கை தேவை
ADDED : ஜன 05, 2024 12:10 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலூர் தொல்லியல் துறை அருங்காட்சியகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுார் வரலாற்று சிறப்புமிக்க நகரம். சங்க புலவர்களில் குறிப்பிடத்தக்கவர் கபிலர். சங்க இலக்கியப் பாடல்கள் அதிகம் பாடியவர். உற்ற நண்பனான பாரியின் மகள்களை மணமுடித்துக் கொடுத்த கபிலன் நண்பனை பிரிந்த சோகத்தில் தென்பெண்ணை ஆற்றின் நடுவில் இருக்கும் குன்றின் மீது உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்தார் என்பது வரலாறு. ராஜராஜ சோழனின் தாய் வானமாதேவியின் சொந்த ஊர் திருக்கோவிலுார், ராஜராஜ சோழன் பிறந்து, ஐந்து வயது வரை விளையாடி, வளர்ந்த இடம் திருக்கோவிலுார்.
இப்படி பழமையும், பெருமையும் வாய்ந்த நகரின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் கடந்த 1994ம் ஆண்டு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கிடைத்த பொருட்கள், அத்துடன் திருக்கோவிலுார் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கல்வெட்டுக்களின் தகவலுடன், கீழையூரில் தொல்லியல் துறை அருங்காட்சியகம் ஒன்றை நிறுவியது.
பழமையின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையிலான இந்த அருங்காட்சியகம் வாடகை கட்டடத்தில் இயங்குவதால் அகழாய்வு பொருட்களை முறையாக காட்சி படுத்த முடியவில்லை.
இட நெருக்கடியை போக்கவும், அருங்காட்சியகத்தை மேம்படுத்தவும் சொந்த கட்டடம் தேவை என தொல்லியல் துறை சார்பில் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு செவி சாய்க்கவில்லை. கடந்த ஆட்சியாளர்கள், ஆட்சியின் நிறைவு காலத்தில், அரைகுறையாக பெயருக்காக கபிலருக்கு நினைவு துாண் ஒன்றை கட்டிவிட்டு சென்று விட்டனர்.
இன்று வரை அது திறக்கப்படவில்லை. வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கும், தென்பெண்ணை ஆற்றுக்கும் நடுவில் அமைக்கப்பட்ட நினைவுத்துாண் பகுதி முழுவதையும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் மேம்படுத்தி, கபிலர் கோட்டத்தை உருவாக்க வேண்டும்.
அத்துடன் பயனற்று கிடக்கும் தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு இங்கேயே சொந்த கட்டடம் அமைத்தால் சுற்றுலா பயணிகள் வரலாற்று சிறப்புமிக்க உலகளந்த பெருமாள், வீரட்டானேஸ்வரர் கோவிலை தரிசித்த கையோடு, நகரின் தொன்மையும், புராதன வரலாற்றையும் அறிந்து கொள்ள வழி ஏற்படும்.