/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் நகரில் ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா? போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி
/
தியாகதுருகம் நகரில் ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா? போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி
தியாகதுருகம் நகரில் ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா? போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி
தியாகதுருகம் நகரில் ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா? போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி
ADDED : மார் 28, 2025 05:34 AM

தியாகதுருகம் நகரின் வழியே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை நீண்டு செல்கிறது. முக்கிய கடை வீதிகள் வழியே செல்லும் அகலம் குறைவான, இந்த சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் பயணித்து வருகின்றன.
புறவழிச்சாலை அமைக்கப்பட்ட போதும் விழுப்புரம், சென்னை, புதுச்சேரி, திருச்சி, கடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், இந்த சாலையிலேயே செல்கின்றன.
ஆக்கிரமிப்பு
இந்த சாலையின் இருபுறமும் கடைக்காரர்களின், ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நடப்பதற்கு கூட வழியின்றி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சில கடைக்காரர்கள் விற்பனை பொருட்கள், விளம்பரப் பலகைகளை சாலையோரம் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் அச்சத்துடன், சாலையை கடந்து செல்கின்றனர். அதேபோல சரக்கு வாகனங்களும் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டு, கடைகளில் பொருட்கள் இறக்கப்படுவதும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
சாலையோரம் ஆட்டோக்களை நிறுத்தி, டிரைவர்கள் அத்துமீறலில் ஈடுபடுவதால், நடந்து செல்ல இடமின்றி, பாதசாரிகள் பரிதவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கடைகளில் பொருட்களை வாங்க வருபவர்களும், இரு சக்கர வாகனங்களை சாலையில் இடையூறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். வாகனங்களின் அணிவகுப்பு காரணமாக சாலையில் இடமின்றி போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
மேலும் கனரக வாகரங்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே கடந்து செல்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த சாலையில் விபத்து அபாயம் பன்மடங்காக அதிகரித்துள்ளது.
நடவடிக்கை தேவை
இந்த சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எவ்வித பராமரிப்பு பணியும் செய்யாமல் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'தியாகதுருகம் நகரின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுவரை, போக்குவரத்திற்கு இடையூறாக அத்துமீறும் வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், சாலையோரம் நடந்து செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் மற்றும் கடைகாரர்களின் விளம்பர பலகைகளை அப்புறப்படுத்தி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். அப்போது தான் இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படும்,' என்றனர்.