திருக்கோவிலுாரில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படுமா?பக்தர்கள் ,பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருக்கோவிலுாரில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படுமா?பக்தர்கள் ,பொதுமக்கள் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூலை 23, 2026 03:29 PM
ADDED : ஜூலை 23, 2026 03:10 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரியில் அபகரிக்கப்பட்ட கோவில் சொத்துக்களை மீட்கும் முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
திருக்கோவிலுாரில் 1500 ஆண்டுகள் பழமையான உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் வெள்ளை விநாயகர் கோவில், பிடாரி அம்மன் கோவில், அய்யனார் கோவில், திரவுபதி அம்மன் கோவில், மேல மடத்திற்கு சொந்தமான வீரபத்திர சுவாமி கோவில், ஞானியார் மடம், வானமாமலை மடம் இது மட்டுமல்லாது இன்னும் பிற கோவில்கள், மடங்களுக்கு சொந்தமான நிலங்கள், தனி நபர்களால் அன்னதானம் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்காக வழங்கப்பட்ட நிறைய இடங்கள் உள்ளது.
இதில் பெரும்பாலும் கோவிலை தவிர ஏனைய இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, அல்லது விற்கப்பட்டுள்ளது, முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனக்கு கூறலாம்.
உதாரணத்திற்கு திருக்கோவிலுாரை ஆண்ட தெய்வீக மன்னன் வழிபட்ட அவரது குலதெய்வமாக கருதப்படும் வீரபத்திர சுவாமி கோவில், மேலமடம் நிர்வாகத்தின் கீழ், கீழையூரில் உள்ளது. இங்கு வீரபத்திர ஸ்வாமி கோவில் மட்டுமல்லாது தெய்வீக மன்னனின் குரு மற்றும் மேலமட ஆச்சாரியார்களின் சமாதியும் 20 சென்ட் பரப்பில் அமைந்துள்ளது. இது மட்டுமல்லாது அருகில் இருக்கும் மாரியம்மன் கோவில் பகுதியில் 65 சென்ட் இடம், மடத்திற்கு அருகில் 89 சென்ட் இடம் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளும் கட்டப்பட்டுள்ளது.
சிலர் காம்பவுண்ட் சுவர் அமைத்து ஆக்கிரமித்து இருப்பதான குற்றச்சாட்டும் உள்ளது. மடம் செயல்படாத நிலையில், இதனை இந்து சமய அறநிலையத் துறையும் கண்டுகொள்ளவில்லை. கோவிலில் விளக்கும் ஏற்றுவதில்லை, வீரபத்திர சுவாமி பூஜைகள் இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மடமும் பாழடைந்து கிடக்கிறது.
பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவிலுக்கு 50 ஏக்கருக்கு மேலும், வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு 36 ஏக்கருக்கு மேலும், ஞானியார் மடத்திற்கு 30 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவிலும் நிலங்கள் உள்ளது. எனினும் ஒரு சில ஏக்கர் நிலங்கள் மட்டுமே இந்து சமய அறநிலையத்துறை ஆவணங்களில் உள்ளது. எஞ்சியவை 99 ஆண்டுகள் குத்தகை, பட்டா மாற்றம், போலி ஆவணங்கள் மூலம் விற்பனை என கடந்த 50 ஆண்டுகளில் பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அபகரிக்கப் பட்டிருக்கிறது.
மேலும் சிறிய கோவில்களாக இருக்கும் பிடாரியம்மன், அய்யனார் உள்ளிட்ட ஏழு கோவில்களின் நிலங்கள் மட்டும் சுமார் 12 ஏக்கர் அளவிற்கு திருக்கோவிலுார் , தேவனுார், இன்னும் பிற கிராமங்களில் உள்ளது. இதன் மதிப்பும் பல நுாறு கோடி ரூபாயாகும். இதனை கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆலய நிலங்கள் கண்டறியும் குழு கண்டறிந்து எந்த பயனும் இல்லை.
இதுகுறித்து திருக்கோவிலுார் பகுதி பக்தர்கள் நீதிமன்றங்களில் பல வழக்குகளை தொடர்ந்து இருந்த போதிலும், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையாளர், அரசு செயலரில் துவங்கி, கீழ் மட்டத்தில் இருக்கும் செயல் அலுவலர் வரை இப் பிரச்சனையில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருக்கின்றனர். வருவாய் துறையோ இதற்கான மூல ஆவணங்களை மறைத்து விட்டனர்.
சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் நேரடியாக கிராம நிர்வாக அலுவலகம், தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகங்களை நாடிச்சென்றால் தொலைந்து விட்டது என்ற ஒரே வார்த்தையில் பதிலை உதிர்க்கின்றனர். இதற்கு காரணம் அரசு மற்றும் கோவில் சொத்துக்களை முறைகேடாக வருவாய்த் துறையினர் மாற்றம் செய்தது வெளியாகிவிடும் என்ற பயம்தான் என்ற கூற்றையும் முன்வைக்கின்றனர் கோவில் நிலங்களை மீட்க முயற்சியில் ஈடுபடும் ஆர்வலர்கள்.
பழனி கோவில் சொத்தை அபகரிக்கும் முயற்சியில் நடந்த பத்திரப்பதிவு போல் திருக்கோவிலுார் கோவிலின் சொத்துக்கள் ஏராளமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு பத்திரப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான கொள்கையை கொண்டிருக்கும் இந்த அரசு கோவில் இடத்தில் குடியிருக்கும் ஏழ்மையான அப்பாவிகளை அகற்றும் அதே நேரத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை ஆட்டையை போட்டவர்களை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
