/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள்... அகற்றப்படுமா? மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
/
ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள்... அகற்றப்படுமா? மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள்... அகற்றப்படுமா? மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள்... அகற்றப்படுமா? மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 08, 2024 04:28 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீமைக்கருவேல மரங்களை அகற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் பயிர் செய்தும், கால்நடைகளை வளர்த்தும் வருமானம் ஈட்டுகின்றனர். மாவட்டத்தில் கோமுகி, மணிமுக்தா அணைகளும், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளும் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. மழைக்காலங்களில் நீர்நிலைகளில் தேங்கும் தண்ணீரின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
ஆனால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கின்றன. ஏரியை ஒட்டியவாறு விளை நிலம் வைத்துள்ளவர்கள், ஏரியின் எல்லைப் பகுதியை சிறிது, சிறிதாக ஆக்கிரமித்து விவசாயம் செய்வதால், ஏரியின் பரப்பளவு குறைந்துள்ளது. இதனால் மழைக்காலத்தில் தேங்கும் குறைந்தளவு தண்ணீர் உடனடியாக குறைந்து கோடைக்காலம் துவங்கும் முன்னரே வற்றி விடுகிறது.
குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. சீமைக்கருவேல மரத்தின் வேர் பல மீட்டர் ஆழம் செல்லக்கூடியது என்பதால் கடும் வறட்சியிலும் நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சும் தன்மை கொண்டது.
இந்த மரம் உள்ள இடத்தில் ஒரு வித நச்சுத்தன்மை இருப்பதால், பிற தாவரங்களை எளிதில் வளர விடாமல் தடுக்கும். முன்பெல்லாம் அடுப்பு எரிப்பதற்கு சீமைக் கருவேல மரங்களை வெட்டி பயன்படுத்தி வந்தனர். இதனால், மரங்கள் ஓரளவு கட்டுக்குள் இருந்தது.
தற்போது, அனைவரது வீடுகள் மற்றும் ஓட்டல்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்துவதால், சீமைக்கருவேல மரத்தை யாரும் வெட்டுவதில்லை. இதனால் ஏரிகளில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் மண்டியுள்ளன. இதன்காரணமாக, அதிகளவு மழை பெய்து ஏரிகள் நிரம்பினாலும் கோடைக்காலம் துவங்கும் முன்னரே எளிதில் வற்றி விடுகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிப்படைகின்றனர்.
எனவே, மழைக்காலம் துவங்கும் முன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
மேலும், சமூக ஆர்வலர்கள், தன்னார்வல அமைப்புகளின் உதவி மூலம் ஏரிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.