/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் பாதியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் பணி மீண்டும் துவக்கப்படுமா? இளைஞர்கள் எதிர்பார்ப்பு
/
கல்வராயன்மலையில் பாதியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் பணி மீண்டும் துவக்கப்படுமா? இளைஞர்கள் எதிர்பார்ப்பு
கல்வராயன்மலையில் பாதியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் பணி மீண்டும் துவக்கப்படுமா? இளைஞர்கள் எதிர்பார்ப்பு
கல்வராயன்மலையில் பாதியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் பணி மீண்டும் துவக்கப்படுமா? இளைஞர்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 18, 2025 06:10 AM

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் உள்ள வெள்ளி மலையில் பாதியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை மீண்டும் துவங்க வேண்டும்.
கல்வராயன்மலை பெரிய கல்வராயன், சின்ன கல்வராயன் மலை என இரண்டு பிரிவுகளை கொண்டுள்ளது. இங்கு, 145 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கல்வராயன் மலை பகுதி மக்கள் விவசாயம், கால்நடை பராமரிப்பு, கடுக்காய், தேன் சேகரித்தல் போன்ற தொழில்களை தங்களின் முக்கிய வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ளனர். இருப்பினும் இப்பகுதி மக்களின் பொருளாதார நிலை மிகவும் பின்தங்கிய நிலை யிலேயே உள்ளது.
இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கர்நாடகா மாநிலம், மைசூர், கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு மிளகு பறித்தல், மரம்வெட்டுதல் மற்றும் செங்கல் சூளை பணிகளுக்கும், சென்னை, கோவை, பெங்களூர் போன்ற பெரும் நகரங்களுக்கு கட்டடபணிகளுக்கு கூலி தொழிலாளிகளாக செல்கின்றனர். சிலர் இப்பகுதி மக்களின் அறியாமையை பயன்படுத்தி தங்களின் சுய லாபத்திற்காக சாராயம் காய்ச்சுதல், ஆந்திரா மாநிலத்திற்கு செம்மரம் கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் பெருமளவில் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக படித்த, பட்டம் பெற்ற இளைஞர்கள் பலரும் வழக்குகளில் சிக்கி, சிறை தண்டனை பெற்று தங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.
கல்வராயன் மலை பகுதி மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை மேம்படுத்தி உள்ளது. குறிப்பாக பழங்குடியினர் இளைஞர்கள் நல மேம்பாட்டிற்காக கல்வராயன் மலையில் உள்ள வெள்ளி மலையில் மத்திய அரசின் நிதி திட்டத்தின் கீழ் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ 1. 25 கோடி மதிப்பில் தேசிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்க கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.
இதில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சிகள் அளிக்கும் வகையில் மைதானம், விளையாட்டு வீரர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கு என தனி தனி விடுதிகள், அலுவலக கட்டடம் மற்றும் கேளரி போன்றவை அமைக்க திட்டமிடப்பட்டது.
மைதானம் அமைக்க நிதிகள் ஒதுக்கப்பட்டு மைதானம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. ரூ 80 லட்சம் மதிப்பில் நிலங்கள் சமன் செய்த நிலையில், மைதானம் அமைக்கும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. ஒதுக்கப்பட்ட தொகையில் மீதி தொகை அரசிற்கு திரும்ப அனுப்பட்டது. பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் மைதானம் புதர்கள் மண்டி காணப்பட்டது.
அதனை அப்பகுதி இளைஞர்கள் சொந்த செலவில் அகற்றி மைதானத்தை தற்காலிகமாக விளையாடுவதற்காக தயார் செய்து வைத்துள்ளனர்.
கல்வராயன் மலை பகுதி இளைஞர்களின் நலன் கருதி வெள்ளிமலையில் பாதியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளை மீண்டும் துவங்க மாவட்ட கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

