/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சுகாதாரமற்ற அரசு பள்ளி கழிவறைகள் விடுமுறையில் சீரமைக்கப்படுமா?
/
சுகாதாரமற்ற அரசு பள்ளி கழிவறைகள் விடுமுறையில் சீரமைக்கப்படுமா?
சுகாதாரமற்ற அரசு பள்ளி கழிவறைகள் விடுமுறையில் சீரமைக்கப்படுமா?
சுகாதாரமற்ற அரசு பள்ளி கழிவறைகள் விடுமுறையில் சீரமைக்கப்படுமா?
ADDED : மே 21, 2025 11:46 PM
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயன்படுத்த முடியாமல் பராமரிப்பின்றி உள்ள கழிவறைகளை கோடை விடுமுறை முடிவதற்குள் சுத்தப்படுத்தி, செப்பனிட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கல்வித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 469 தொடக்கப் பள்ளிகள், 167 நடுநிலைப்பள்ளிகள், 60 உயர்நிலைப் பள்ளிகள், 69 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பொருத்தமட்டில் தொடக்கப் பள்ளிகள் 20, நடுநிலை பள்ளிகள் 5, உயர்நிலை பள்ளிகள் 3 உள்ளன.
அதேபோல் பழங்குடியின நல பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகள் 26, நடுநிலை பள்ளிகள் 13, உயர் நிலைப்பள்ளிகள் 4, மேல்நிலைப் பள்ளிகள் 7 உள்ளன.
இவைகளில், 95 சதவீத பள்ளிகளில் சுகாதாரமான முறையில் பயன்படுத்தப்படும் கழிவறைகள் இல்லாமல் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதேபோல பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு கூட முறையான கழிவறை வசதி இல்லை.
நோய் அபாயம்
பல பள்ளிகளில் கழிவறை இருந்தும், அவற்றிற்கு தண்ணீர் வசதி இன்றி துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது.
இதனாலேயே பெரும்பாலான மாணவ, மாணவியர் பள்ளியில் சிறுநீர் கழிக்காமல் நாள் முழுதும் அடக்கி வைத்து வீட்டிற்கு சென்று கழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
வேறு வழியின்றி இதனை பயன்படுத்தும் மாணவர்களுக்கு தொற்று நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் பரவும் அபாயம் தொடர்கதையாக உள்ளது.
அரசுப் பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சீரமைக்க பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் முயற்சி செய்வதில்லை. இதனால் பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் கழிவறை வசதியின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அதிகாரிகள் மெத்தனம்
பெற்றோர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், அரசு பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுகாதாரமான முறையில் பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பில் படிக்கும் மாணவியர் பலர் பள்ளிக்கு அருகில் வசிக்கும் தங்களது தோழிகளின் வீடுகளுக்கு சென்று கழிவறையை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.
மாணவர்களைப் பொறுத்தவரை பலர், பள்ளிகளில் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துகின்றனர்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளி கழிவறைகளை சுத்தப்படுத்தி சீரமைக்க இது சரியான நேரமாகும்.
மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகள் அனைத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து அவற்றை உடனடியாக செப்பனிட்டு போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நமது நிருபர்