சிற்பக்கலை படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை...டூ தமிழகத்தின் ஒரே மரபு கலை கல்லூரியின் அவல நிலை
சிற்பக்கலை படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை...டூ தமிழகத்தின் ஒரே மரபு கலை கல்லூரியின் அவல நிலை
ADDED : ஆக 21, 2012 01:38 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம், அரசு கட்டட, சிற்பக்கலை கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
சேர்க்கை முறையில் தளர்வு ஏற்படுத்தி, சிற்பக்கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்தால் மட்டுமே, தமிழகத்தின் பாரம்பரிய கட்டட மற்றும் சிற்பக் கலைகள் தப்பிக்கும்.மாமல்லபுரத்தில், அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி, கடந்த 1957ம் ஆண்டில், கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலை பயிலகமாக துவக்கப்பட்டது. அப்போது, தொழில் துறையின் கீழ் இயங்கிய பயிலகத்தில் மரபு கட்டடக்கலை மற்றும் கற்சிற்பக் கலை ஆகிய பாடப்பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட்டன.சிறப்பான வளர்ச்சிஇக்கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள் யாவரும், கல்வித்தகுதி போன்ற தகுதி வரை முறை இன்றி, பயிற்சி பெற்றனர். அதன்பின், கற்சிற்பக் கலையில், நான்காண்டு பட்டயக் கல்வி திட்ட முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து, 1975ம் ஆண்டு, இம்மையம், தொழில்நுட்பத் துறையின் கீழ் கல்லூரியாக மாற்றப்பட்டது. அதில், பட்டயக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.கடந்த 1984ம் ஆண்டு, மரபு கற்சிற்பம், சுதைசிற்பம், மரசிற்பம், உலோகசிற்பம் ஆகிய பாடப்பிரிவுகளில், பட்டயக் கல்வி துவக்கப்பட்டது. மரபு வண்ண பாடப்பிரிவு மட்டும் பட்டயக் கல்வியாக இருந்தது. இத்தகைய கல்வி திட்ட முறை நடைமுறையில் இருந்தபோது, இக்கல்லூரி மிகச் சிறப்பாக வளர்ந்து வந்தது. மரபு கலைகளுக்கான ஒரே கல்லூரி என்ற பெருமையையும் பெற்றது.இந்நிலையில், கடந்த 1998ம் ஆண்டு பட்டயக் கல்வி முறை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மரபு கட்டடக் கலையில், பி.டெக்., பட்டக் கல்வி, பிற சிற்பக் கலைகளில் பி.எப்.ஏ., பட்டக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கல்வி முறையில், பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.சேர்க்கை குறைவுதற்போது, பிளஸ் 2 முடித்தவர்கள் பொறியியல், மருத்துவம் மற்றும் பிற வகை கல்வி கற்கவே ஆர்வமாக உள்ளனர். சிற்பக் கலை கல்லூரியில் சேர விரும்புவதில்லை. இங்குள்ள பி.டெக்., மற்றும் பி.எப்.ஏ., ஆகிய பட்டங்கள், பிற கல்லூரி பட்டங்களைபோல் கவர்ச்சிகரமாக இருப்பதால், ஒரு சில மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்கின்றனர். ஆனால், வகுப்புகள் துவங்கி, பாடங்கள் அறிமுகமான பின், இதை கற்க விருப்பமின்றி விலகுகின்றனர்.ஆண்டுக்கு, 50 பேர் வீதம், நான்காண்டுகளில், 200 பேர் இங்கு பயிலவேண்டும். ஆனால், 92 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு ஒரு முதல்வர், 16 விரிவுரையாளர்கள், இரண்டு பயிற்றுனர்கள், இரண்டு உதவி பயிற்றுனர்கள் என, 20 நிரந்தர ஊழியர்கள் மற்றும் தமிழ், இசை, கணினி ஆகிய துறைகளுக்கு, மூன்று பகுதிநேர பயிற்றுனர்கள் உள்ளனர். நடப்பாண்டில், 50 இடங்களுக்கு, 22 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அவர்களில் சிலர் வேறு படிப்புக்களில் சேருவதற்காக, மாறுதல் சான்றிதழை கேட்டு வருகின்றனர்.பரிசீலனைஇதுகுறித்து கல்லூரி முதல்வர் குண சேகரனிடம் கேட்டபோது, ''பட்டயக் கல்வி கல்விமுறையை மீண்டும் துவக்குவது பற்றி பரிசீலித்து, அரசுக்கு தெரிவிக்கப்படும். முதுகலை பட்ட கல்வி துவக்கவும் ஆலோசனை செய்து வருகிறோம்,'' என்றார்.மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தபதிகள் கூறும்போது, ''கல்லூரியில், மரபு கலைகள் குறித்து, உயர் படிப்பு முறையை அறிமுகப்படுத்துவது வரவேற்கத் தக்கது. அதே வேளையில், கட்டட, சிற்ப கலைகளில் ஆர்வம் உள்ள, படிப்பு குறைந்தவர்களுக்கும், முன்னைப்போல் பயிற்சி பெற அங்கு வாய்ப்பு தர வேண்டும். அந்த நிலை ஏற்பட்டால் மட்டுமே, அரசு சிற்பக்கலை கல்லூரி மேலும் வளர்ச்சியடையும்,'' என்றனர்.
