/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
2,000 பூநாரைகள், 200 கடற்காக்கைகள் முகாம் பழவேற்காடில் கண்கொள்ளா காட்சி
/
2,000 பூநாரைகள், 200 கடற்காக்கைகள் முகாம் பழவேற்காடில் கண்கொள்ளா காட்சி
2,000 பூநாரைகள், 200 கடற்காக்கைகள் முகாம் பழவேற்காடில் கண்கொள்ளா காட்சி
2,000 பூநாரைகள், 200 கடற்காக்கைகள் முகாம் பழவேற்காடில் கண்கொள்ளா காட்சி
ADDED : ஏப் 04, 2024 11:51 PM

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடில் 2,000க்கும் மேற்பட்ட பூநாரைகள், 200க்கும் மேற்பட்ட பழுப்புதலை கடற்காக்கை உள்ளிட்ட பறவைகள் முகாமிட்டுள்ளது, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் நோக்கி வலசை வரும் பெரும்பாலான பறவைகள், திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடில் தான் முதலில் முகாமிடும். அதே போன்று 'சீசன்' முடிந்து திரும்பும் நிலையிலும், பழவேற்காடில் தங்கி செல்வது வழக்கம்.
தமிழகத்தில், கடந்த ஆண்டு ஆக., -- செப்., மாதங்களில் வலசை பறவைகள் சீசன் முடிவுக்கு வருகிறது. வலசை வந்த பறவைகள் திரும்பி செல்ல, ஏப்., -- மே மாதங்களில் ஆயத்தமாகிவிடும்.
நீண்ட தொலைவில் இருந்து வந்த இப்பறவைகள், திரும்பிச் செல்லும் போது அதற்கு ஏற்ப உடலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் எங்கு உணவு கிடைக்கிறதோ அங்கு, சில வாரங்கள் பறவைகள் முகாமிடுவது வழக்கம்.
இந்த வகையில் அதிக எண்ணிக்கையிலான வலசைப் பறவைகள் பழவேற்காடில் முகாமிட்டுள்ளன.
இதுகுறித்து பழவேற்காடு பகுதியைச் சேர்ந்தவரும், 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் பறவைகள் ஆர்வலருமான சிக்கந்தர் கூறியதாவது:
பழவேற்காடில் தற்போது அதிக எண்ணிக்கையில் பறவைகள் வர துவங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, 2,000க்கும் மேற்பட்ட பூ நாரைகள், 200க்கும் மேற்பட்ட பழுப்பு தலை கடற்காக்கைகள், சிறிய ஆலா போன்ற பறவைகள் முகாமிட்டுள்ளன.
இதுதவிர, 100க்கும் மேற்பட்ட பெரிய கொண்டை ஆலாக்கள், மீசை ஆலா, காஸ்பியன் ஆலா, கருவால் மூக்கன், மங்கோலிய பட்டாணி உப்புக்கொத்தி, பெரிய பட்டாணி உப்புக்கொத்தி, வளைமூக்கு மண்கொத்தி, கொசு உள்ளான், அரிவாள் மூக்கு உள்ளான், கல்திருப்பி உள்ளான், சாம்பல் உப்புக்கொத்தி உள்ளிட்ட 22 வகையான பறவைகள் முகாமிட்டுள்ளன.
இதில் பெரும்பாலான பறவைகள், நீண்ட தொலைவு பறக்க தேவையான கொழுப்பு சத்தை உடலில் அதிகரித்துக்கொள்ள இங்கு முகாமிட்டுள்ளன.
உவர்நீர் வடிந்த நிலையில், சேற்றில் கிடைக்கும் சிறிய உயிரினங்களே இவற்றுக்கு பிரதான உணவாக உள்ளன.
இந்த வகையில் பழவேற்காடின் உயிர்ச்சூழல் வளம் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

