/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் திருவிழா மோதல் பின்னணி வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது
/
கோவில் திருவிழா மோதல் பின்னணி வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது
கோவில் திருவிழா மோதல் பின்னணி வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது
கோவில் திருவிழா மோதல் பின்னணி வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது
ADDED : ஜூன் 15, 2024 12:05 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம், புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மகன் சின்னா என்கிற உதயநிதி, 20. இவர், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில், பி.எஸ்சி., கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு இவரது வீட்டிற்கு வந்த கும்பல், கத்தியுடன் வீட்டிற்குள் புகுந்து, தந்தை கோதண்டராமன், தாய் சரிதா கண் முன்னே, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த உதயநிதியை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த உதயநிதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவலறிந்த பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார், உதயநிதியின் உடலை கைப்பற்றினர். கொலை செய்த நபர்களை பிடிக்க, டி.எஸ்.பி., முரளி தலைமையிலான தனிப்படையினர் விரைந்தனர்.
உதயநிதியை கொலை செய்வதற்கு சற்று நேரம் முன், இதே கும்பல், படுநெல்லி கிராமத்தில் வசித்து வந்த உதயநிதியின் நண்பன் கிரி, 20, என்பவரையும் வெட்டியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த கிரி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசாரின் விசாரணையில், கொலை செய்யப்பட்ட உதயநிதியும், அவரது அண்ணன் பாரிவேந்தனும், அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரை, கடந்த மார்ச் மாதம் நடந்த கோவில் திருவிழாவில் தாக்கியுள்ளனர்.
இதனால், பிரேம்குமாரின் தந்தை ராஜாராமன் போலீசில் புகார் கொடுத்ததன்படி, பாரிவேந்தன் மற்றும் உதயநிதி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கோவில் திருவிழா மோதலின்போது, உதயநிதிக்கு ஆதரவாக கிரியும் இருந்துள்ளார்.
இதன் காரணமாகவே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே கிரியையும் கொலை செய்ய அந்த கும்பல் திட்டமிட்டிருந்தது, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக, கோவிந்தவாடி அகரம் புதிய காலனியைச் சேர்ந்த பிரேம்குமார், 24; அவரது நண்பர்களான கோவிந்தவாடி பழைய காலனியைச் சேர்ந்த சஞ்சய், 22; மூர்த்தி, 23; கிஷோர், 23; கோபிநாத், 22; தட்சிணாமூர்த்தி, 23, ஆகிய ஆறு பேரையும், கோவிந்தவாடி அகரம் கிராமத்திலேயே போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரையும், நீதிமன்ற காவலில் போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர்.