/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பட்டா சேவைகளுக்காக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
/
பட்டா சேவைகளுக்காக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
ADDED : மே 28, 2024 09:31 PM
காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும், வருவாய் துறையில் வழங்கப்படும் பட்டா சேவைகள், சான்றிதழ்கள் ஆகியவை முறையாக வழங்கப்படுகிறதா எனவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பயனாளிகளை நேரில் வரச்சொல்லி அலைகழிப்பதாக புகார்கள் எழுந்ததால், தமிழகம் முழுதும் வருவாய் துறையின் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். வருவாய் நிர்வாக கமிஷனர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, நில நிர்வாக கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவரை, நோடல் அதிகாரியாக நியமித்து, வருவாய் நிர்வாக கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிற்கும், துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, காஞ்சிபுரம் தாலுகாவிற்கு ஆய்வுக் குழு அலுவலர் சத்யா, வாலாஜாபாத் தாலுகாவிற்கு காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கலைவாணி, உத்திரமேரூர் தாலுகாவிற்கு வழங்கல் அலுவலர் பாலாஜி, ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்கு பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சீனிவாசன், குன்றத்துார் தாலுகாவிற்கு சரவணக்கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆன்லைனில் வழங்கப்படும் பட்டா பெயர் மாற்றம், உப்பிரிவு மாற்றம், பட்டா மேல்முறையீடு மற்றும் வருமானம், ஜாதி, இருப்பிடம், வாரிசு போன்ற சான்றிதழ் வழங்கும் சேவைகள் முறையாக வழங்கப்படுகிறதா என, ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.