/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாயகம் புறப்படும் வேடந்தாங்கல் பறவைகள்
/
தாயகம் புறப்படும் வேடந்தாங்கல் பறவைகள்
ADDED : மே 06, 2024 05:21 AM

மதுராந்தகம் : வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசை வந்த வெளிநாட்டு பறவைகள், வேடந்தாங்கலில் இருந்து மீண்டும் தங்கள் தாயகத்திற்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஏரி, 36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 16 அடி உயரம் நீர்ப்பிடிப்புக் கொண்டதாகும். தற்போது, 4 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.
இங்கு, பங்களாதேஷ், பர்மா, இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பறவைகள் வேடந்தாங்கலுக்கு வலசை வருகின்றன.
குறிப்பாக, செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், குளிர்காலத்தில் பறவைகள் வலசை வர துவங்குகின்றன. டிச., - பிப்., மாதங்களில் வலசை வரும் பறவைகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மார்ச், ஏப்., மே மாதங்களின் கடைசி வாரத்தில் பறவைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும்.
இதில், கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தைகுத்தி நாரை, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான், வக்கா, புள்ளிமூக்கு வாத்து, வர்ணநாரை உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்தன.
சுமார், 40,000த்திற்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து, 2 மடங்காக மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்கு புறப்பட்டு செல்கின்றன.
இரவு நேரத்தில் கூட்டம், கூட்டமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து, தங்கள் தாய்நாட்டிற்கு பறவைகள் சென்ற வண்ணம் உள்ளன. தற்போது, 15,000த்துக்கும் குறைவான பறவைகளே உள்ளன.
சைபீரியா, ஆஸ்திரேலியா, மியான்மர் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வர்ணநாரை, கூழைக்கடா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்புதாரா உள்ளிட்ட சில பறவை இனங்களே தற்போது உள்ளன.
குறிப்பாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த அனைத்து பறவைகளும் வேடந்தாங்கலுக்கு வந்த பின், ஆஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த வர்ண நாரை பறவை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.
பின், சரணாலயத்தில் இருந்து சீசன் முடியும் மே மாதத்தின் கடைசி வாரத்தில் திரும்பிச் செல்கின்றன.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, கடந்தாண்டு செப்., முதல் தற்போது ஏப்ரல் வரை வருகை புரிந்த சுற்றுலா பயணியரில், பெரியவர்கள் 74,000 பேரும், சிறியவர்கள் 18,000 பேரும் என, மொத்தம் 95,000த்திற்கும் அதிகமானோர் வந்துள்ளனர்.
இந்த மே மாதத்தின் கடைசி வாரத்தில், சீசன் முடிந்து, சரணாலயத்தில் உள்ள அனைத்து பறவைகளும், தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்லும் என, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.