
சாலையில் திரியும்
தெரு நாய்கள் பிடிக்கப்படுமா?
சி ன்ன காஞ்சிபுரம், மேட்டுப்பாளையம் தெருவில், 25க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை மறித்து ஓய்வெடுக்கும் நாய்கள், அவ்வழியாக செல்லும் பாதசாரிகளை குரைக்கின்றன.
சைக்கிள் மற்றும் டூ - வீலரில் செல்வோரை குரைத்தபடியே நாய்கள் விரட்டி செல்வதால், பதற்றமடையும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதனால், சிறியவர் முதல் பெரியவர் வரை, இத்தெருவில் அச்சத்துடன் நடமாடுகின்றனர்.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், காஞ்சிபுரம் மேட்டுப்பாளையம் தெருவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.நீலகண்டன், காஞ்சிபுரம்.
புகார் பெட்டி
ரயில்வே நடைமேடையில்
திறந்திருக்கும் பள்ளம்
அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில், திருமால்பூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு, நடை மேம்பாலம் அமைக்க நடைமேடையில் பள்ளம் தோண்டி உள்ளனர். இன்னும் கட்டுமானப் பணிகள் துவக்கவில்லை.
இதனால், ரயில் ஏற வருவோர், பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நடைமேடை பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ.மோகன், காஞ்சிபுரம்.

