/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர்வள துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
/
நீர்வள துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
ADDED : பிப் 25, 2025 02:16 AM

உத்திரமேரூர்,
உத்திரமேரூர் தாலுகா, வாடாநல்லூர், அருணாச்சலபிள்ளை சத்திரம், பருத்திகொள்ளை, மல்லியங்கரணை ஆகிய பகுதிகளில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
இங்குள்ள, 500 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களுக்கு, உத்திரமேரூர் ஏரியில் உள்ள, ஏழாவது மதகு வழியாக நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மதகில் இருந்து இரண்டு மாதங்களாக, தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதற்கு பதிலாக ஆறாவது மதகு வழியாக நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இது நீர்ப்பாசனத்திற்கு போதுமானதாக இல்லை.
இதனால், கதிர்விடும் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல், விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று மதியம் 12:00 மணியளவில், உத்திரமேரூர் நீர்வளத்துறை அலுவலத்தில் மனு அளிக்க வந்தனர்.
அப்போது அதிகாரிகள் யாரும் இல்லாததால், ஆவேசமடைந்த விவசாயிகள் அதிகாரிகளை கண்டித்து, அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
உத்திரமேரூர் ஏரியின் ஏழாவது மதகை நீர்வளத் துறையினர் அடிக்கடி மூடியே வைக்கின்றனர்.
இதனால், விளைநிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.