/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கைத்தறித்துறை அறிவிப்புகள் காஞ்சி நெசவாளர்கள் ஏமாற்றம்
/
கைத்தறித்துறை அறிவிப்புகள் காஞ்சி நெசவாளர்கள் ஏமாற்றம்
கைத்தறித்துறை அறிவிப்புகள் காஞ்சி நெசவாளர்கள் ஏமாற்றம்
கைத்தறித்துறை அறிவிப்புகள் காஞ்சி நெசவாளர்கள் ஏமாற்றம்
ADDED : ஜூலை 02, 2024 02:34 AM
காஞ்சிபுரம் : தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கடந்த மாதம் 20ம் தேதி துவங்கி, 29ம் தேதி வரை நடந்தது. இதில், துறை வாரியாக மானிய கோரிக்கை அறிவிப்புகள் பல, அமைச்சர்கள் வாயிலாக வெளியிடப்பட்டன.
கடந்த 27ம் தேதி, கைத்தறி மற்றும் துணி நுால் துறை மானிய கோரிக்கை அறிவிப்புகளை, அமைச்சர் காந்தி வெளியிட்டிருந்தார்.
அதில், கூட்டுறவு கைத்தறி சங்க நெசவாளர்களுக்கு அடிப்படை கூலி, 10 சதவீதம் உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், வேலுார் மற்றும் நாகர்கோவிலில் 1.5 கோடி ரூபாயில் சாய ஆலைகள் நிறுவப்படும் எனவும், சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் கைத்தறி கண்காட்சி நடத்தப்படும் என, பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் காந்தி வெளியிட்டிருந்தார்.
ஆனால், கைத்தறி பட்டு சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊரான காஞ்சிபுரத்திற்கு எந்தவிதமான அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிடாதது, ஏமாற்றத்தை அளித்திருப்பதாக, காஞ்சிபுரம் நெசவாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
கூட்டுறவு கைத்தறி சங்கங்கள் மற்றும் தனியார் கடைகள் வாயிலாக, ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்க்கு மேலாக பட்டு சேலைகள் விற்பனை இங்கு நடக்கின்றன.
நெசவாளர்கள், சாயமிடுவோர், பட்டு, ஜரிகை விற்பனை செய்வோர், பட்டு சேலை உற்பத்தியாளர்கள் என, நேரடியாகவும், மறைமுகமாகவும் 50,000 பேர் காஞ்சிபுரத்தில் நெசவுத்தொழிலை நம்பியுள்ளனர்.
மானிய கோரிக்கை அறிவிப்பின்போது, காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு பயனளிக்கும் வகையிலும், பட்டு சேலை விற்பனையை அதிகரிக்கும் வகையிலான புதிய திட்டம் அல்லது நிதி ஒதுக்கீடு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் ஒரு ஆண்டுக்கு முன்பாக, காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையம் அமைக்கப்படும் என, தெரிவித்திருந்தார்.
அதற்கான, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றியாவது சட்டசபை அறிவிப்பில் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதுபற்றிய அறிவிப்பும் இடம் பெறவில்லை.
தேசிய அளவிலான கைத்தறி கண்காட்சி சென்னையிலும், மாநில அளவிலான கண்காட்சி கோவை, திருப்பூர், திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் நடைபெறும் என, அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆனால், மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி நடத்த பொருத்தமான இடமான, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கைத்தறி துறையினர் தவிர்த்துள்ளதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரத்தில், விற்பனை மையங்கள் இல்லாத பட்டு கைத்தறி சங்கங்களுக்கு, விற்பனை வளாகம் அமைவதற்கான அறிவிப்புகூட இம்முறை வராதது, கைத்தறி சங்க நிர்வாகிகளுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.