/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாதவரத்தில் 70 அடி ஆழம் வரை தோண்டி மணல் திருட்டு அதிகாரிகள் ஆய்வில் மாபியாக்களின் அட்டூழியம் அம்பலம்
/
மாதவரத்தில் 70 அடி ஆழம் வரை தோண்டி மணல் திருட்டு அதிகாரிகள் ஆய்வில் மாபியாக்களின் அட்டூழியம் அம்பலம்
மாதவரத்தில் 70 அடி ஆழம் வரை தோண்டி மணல் திருட்டு அதிகாரிகள் ஆய்வில் மாபியாக்களின் அட்டூழியம் அம்பலம்
மாதவரத்தில் 70 அடி ஆழம் வரை தோண்டி மணல் திருட்டு அதிகாரிகள் ஆய்வில் மாபியாக்களின் அட்டூழியம் அம்பலம்
ADDED : மே 13, 2024 02:22 AM

சென்னை: சென்னை, மாதவரம் பால்பண்ணை அடுத்த கொசப்பூரில், 100 ஏக்கர் பரப்பில் இயங்கிய, 'ஸ்பிக் ஆரோ மெடிக்' எனும் பாலி நுாலிழை உற்பத்தி செய்யும் நிறுவனம், பல ஆண்டாக மூடிக்கிடக்கிறது. அங்கிருந்த இயந்திரங்கள், மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு திருடு போயின. இந்த நிலையில், அந்த இடம் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகும் பராமரிப்பின்றி நிலையால், அங்கு மண் மற்றும் மணல் திருட்டு நடந்தது. அதற்காக, அந்த இடத்தின் சுற்றுச்சுவர் ஆங்காங்கே இடிக்கப்பட்டது.
தரமான மணல்
தினமும், இரவில், 30 டாரஸ் லாரிகளில், மணல் திருட்டு நடந்தது. இதுகுறித்து, நேற்று முன்தினம் நம் நாளிதழில், செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, சென்னை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, நேற்று முன்தினம் மதியம், 3:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, வருவாய்த் துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.
அங்கிருந்தோர், அதிகாரிகளைக் கண்டதும், லாரி, பொக்லைன் மற்றும் ஜே.சி.பி., வாகனங்களுடன் தப்பினர்.
1 லோடு 80,000 ரூபாய்
அதிகாரிகள் ஆய்வு செய்த இடங்களில், 50 முதல் 70 அடி ஆழம் வரை, பள்ளம் தோண்டப்பட்டது தெரியவந்தது. அதில், 30 அடி ஆழம் வரை சவுடு மண், அதன் கீழே தரமான மணலும் இருப்பது தெரியவந்தது.
உள்ளூர் போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆசியுடன், மணல் மாபியாக்கள் 'கபளீகரம்' செய்து, 1 லோடு மணல், 80,000 ரூபாய் வரை விற்பதும் தெரியவந்தது.
மணலுக்காக தோண்டப்பட்ட இடங்களில், இரண்டு 'டாரஸ்' லாரிகள், ஒன்றன் மீது ஒன்றை நிறுத்தும் அளவிற்கு, மெகா பள்ளங்கள் உருவாகி இருந்தன.
அதனால், பல மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டிருந்தன. மேலும், அங்குள்ள உயர்மின் அழுத்த கோபுரங்களும் சேதமடையும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன.
மணல் திருட்டால், மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, போலீஸ், வருவாய், மின்வாரியம், சுற்றுச்சூழல், சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தினர் ஒருங்கிணைந்து, அரசு கட்டுப்பாட்டில் இடம் முழுக்க ஆய்வு செய்து, வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இங்கு நடக்கும் மணல் திருட்டால், டாரஸ் லாரிகளின் அழுத்தம் தாங்காமல், மாநகராட்சி சாலைகள் சேதமாகின்றன. மேலும், 50 அடிக்கு மேல் தோண்டப்படும் பள்ளத்தால், கடல்நீர் உட்புகுந்து உப்பு நீராகி விடும் ஆபத்து உள்ளது.
அதனால், அடுத்த சில ஆண்டுகளில், வடசென்னை பகுதிகளில், ஒட்டுமொத்தமாக நல்ல குடிநீர் கிடைப்பது கேள்விக்குறியாகி விடும்.
உயர்மின் கோபுரங்கள்
மேலும், மணல் திருடர்களால் உயர்மின் அழுத்த கோபுரங்கள் சேமதடைந்தால், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பெறப்படும் கூடுதல் மின்சாரம், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, உபரியாகக் கிடைக்கும் மின்சார வினியோகம் பாதிக்கப்படும்.
அதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும், தொழில் உற்பத்தியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து, மணல் திருட்டை தடுத்து, வடசென்னையை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.