/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரே மாதத்தில் பாசி படர்ந்த குளம் ரூ.17 லட்சத்தில் நடந்த சீரமைப்பு பணி வீண்
/
ஒரே மாதத்தில் பாசி படர்ந்த குளம் ரூ.17 லட்சத்தில் நடந்த சீரமைப்பு பணி வீண்
ஒரே மாதத்தில் பாசி படர்ந்த குளம் ரூ.17 லட்சத்தில் நடந்த சீரமைப்பு பணி வீண்
ஒரே மாதத்தில் பாசி படர்ந்த குளம் ரூ.17 லட்சத்தில் நடந்த சீரமைப்பு பணி வீண்
ADDED : ஆக 12, 2024 03:26 AM

காஞ்சிபுரம் : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், 52வது திவ்யதேசமாக, காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு சொந்தமான தெப்ப குளம், கோவில் அருகில் உள்ளது.
பொய்கை ஆழ்வார் இக்குளத்தில் அவதரித்ததால், 'பொய்கை ஆழ்வார் குளம்' என அழைக்கப்படுகிறது. நாளடைவில் இக்குளத்தின் பெயர் மருவி, தற்போது பொய்யாகுளம் என அழைக்கப்படுகிறது.
பல்வேறு சிறப்பு பெற்ற இக்குளம் பராமரிப்பு இல்லாமல் சீரழிந்த நிலையில் இருந்தது. குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, சென்னை 'பெட்ரோபேக் ஆயில் அண்டு காஸ்' நிறுவனத்தின், இயற்கை பாதுகாப்பு மற்றும் மேம்படுத்துதல் திட்டம் மற்றும் எக்ஸ்னோரா இயற்கை சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 17.80 லட்சம் ரூபாய் செலவில், 4,080 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட குளம் சீரமைப்பு பணி, கடந்த பிப்., மாதம் துவங்கியது.
இதில், குளம் முழுதும் துார்வாரப்பட்டு, படிகள், சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டு, கம்பி வலை அமைத்து குளம் முழுதும் சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட குளம், கோவில் நிர்வாகத்திடம் கடந்த மாதம் ஒப்படைக்கப்பட்டது.
சீரமைப்பு பணி முடிந்து ஒரே மாதத்திலேயே பொய்கையாழ்வார் குளத்தில் பாசி படர்ந்துள்ளதால், குளம் முழுதும் பச்சை நிறமாக மாறியுள்ளது.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாயில் 'பில்டர்' அமைக்காததால், மழைநீரில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில், பாலித்தீன் கவர் உள்ளிட்ட குப்பை கழிவுகள் குளத்தில் குவிந்துள்ளது.
இதனால், 17.8 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட குளம் மீண்டும் மாசடையும் சூழல் உள்ளது.
எனவே, குளத்தில் படர்ந்துள்ள பாசியை அகற்றுவதோடு, குளத்திற்கு மழைநீர் வரும் சேகரிப்பு தொட்டிகளில் 'பில்டர்' அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.