/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் கல்லுாரி அமைக்க வலியுறுத்தல்
/
வாலாஜாபாதில் கல்லுாரி அமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 04, 2025 01:13 AM
வாலாஜாபாத், வாலாஜாபாதில், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் அரசு மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவை உள்ளன.
வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி, அவளூர் மற்றும் நெய்யாடிவாக்கம் ஆகிய பகுதிகளில், அரசு மேல்நிலைப் பள்ளியும், பழையசீவரத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.
இப்பள்ளிகளில், வாலாஜாபாத் சுற்றி உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600 மாணவ - மாணவியர், பிளஸ் 2 முடித்து மேற்படிப்பிற்கு செல்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை, பிளஸ் -2 தேர்ச்சி பெற்று கல்லுாரி செல்லும் மாணவ -- மாணவியரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
இப்போதெல்லாம் பள்ளிகளில் மாணவ -- மாணவியரின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. இப்பகுதிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்களில், பெரும்பாலானோர் காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும், பிற தனியார் கல்லுாரிகளிலும் பயில்கின்றனர்.
வாலாஜாபாத் சுற்றி கிராமங்களாகவும், விவசாயம் சார்ந்த பகுதிகளாகவும் உள்ளது. இதனால், கல்லுாரி படிப்பை ஏற்கனவே அவர்கள் சிரமமாக எண்ணக்கூடிய நிலையில் உள்ளனர்.
இதில், போக்குவரத்து மற்றும் துாரம் காரணமாக மேற்படிப்பை தொடர்வதில் அவர்கள் பல்வேறு சிக்கலை சந்திக்கின்றனர்.
எனவே, வாலாஜாபாத் மையமாக கொண்டு, சுற்றி உள்ள கிராம மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், வாலாஜாபாதில் அரசு கலை- மற்றும் அறிவியல் கல்லுாரி ஏற்படுத்த மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.