/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முதலீட்டாளர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கிடைப்பது...எப்போது?: பொருளாதார குற்றப்பிரிவு செயல்பாடில் திருப்தி இல்லை;மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தை இழந்தோர் புலம்பல்
/
முதலீட்டாளர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கிடைப்பது...எப்போது?: பொருளாதார குற்றப்பிரிவு செயல்பாடில் திருப்தி இல்லை;மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தை இழந்தோர் புலம்பல்
முதலீட்டாளர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கிடைப்பது...எப்போது?: பொருளாதார குற்றப்பிரிவு செயல்பாடில் திருப்தி இல்லை;மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தை இழந்தோர் புலம்பல்
முதலீட்டாளர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கிடைப்பது...எப்போது?: பொருளாதார குற்றப்பிரிவு செயல்பாடில் திருப்தி இல்லை;மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தை இழந்தோர் புலம்பல்
UPDATED : மார் 14, 2025 10:45 PM
ADDED : மார் 14, 2025 08:26 PM

காஞ்சிபுரம்:ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்தவர்கள், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காமல் உள்ளது. மேலும் போலீசாரிடம் இருந்து எவ்வித நடவடிக்கை விபரமும் தெரியாததால், முதலீடு செய்தவர்கள் புலம்பி வருகின்றனர்.
சென்னை உட்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த
ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், நான்கு
ஆண்டுகளுக்கு முன், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, பல
கோடி ரூபாய் பெற்று மோசடி செய்தன.
இந்த நிதி நிறுவனங்கள் பிரபலமாக செயல்பட்ட போது, இந்நிறுவனங்கள் அளித்த வட்டி தொகை பற்றி தமிழகம் முழுதும் பேச்சாக இருந்தது.
இவை
மோசடி நிறுவனங்கள் என தெரிந்த பின், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின்
விசாரணையில், 2 லட்சம் முதலீட்டாளர்களிடம், 14,000 கோடி ரூபாய்க்கு மேல்
பெற்று, மூன்று நிதி நிறுவனங்களும் மோசடி செய்தது தெரிந்தது.
இதையடுத்து
போலீசார் நடவடிக்கை எடுப்பதற்குள், ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர்கள்
ராஜசேகர், அவரது மனைவி உஷா, ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன இயக்குனர்கள் லட்சுமி
நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன், மோகன்பாபு ஆகியோர் வெளிநாடுகளுக்கு
தப்பிச் சென்றனர்.
இவர்களில் ராஜசேகர், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில், கடந்த 2023 டிசம்பரில் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை தமிழகம் அழைத்து வர, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், ஓராண்டாகியும் பலன் கிடைக்கவில்லை. ராஜசேகர் மனைவி உஷா பதுங்கி இருக்கும் இடம் குறித்து, துப்பு துலக்க முடியவில்லை.
சமீபத்தில்,
தாய்லாந்து தலைநகரில் இருந்து நாடு கடத்தப்பட்டு, கொல்கட்டா வந்த
ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஜனார்த்தனன் கைது
செய்யப்பட்டார்.
தொடர்ந்து, மற்ற மூன்று இயக்குனர்களும், வெளிநாடுகளில் தலைமறைவாகவே உள்ளனர்.
ஹிஜாவு
நிதி நிறுவன இயக்குநர்கள் அலெக்சாண்டர், அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர்,
எந்த நாட்டில் உள்ளனர் என்பதை, போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால்,
நிதி நிறுவன மோசடி வழக்குகள் விசாரணை, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல்
உள்ளதால், முதலீட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த
நிதி நிறுவனங்களில், வேலுாரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஐ.எப்.எஸ்.,
நிதி நிறுவனத்தின் கிளைகள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,
திருவள்ளூர் மாவட்டங்களில் மிக பிரபலமாக இயங்கின.
கொரோனா
காலகட்டமான 2020 - 21ல் துவங்கிய ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தில், 1 லட்சம்
ரூபாய்க்கு, மாதம் 6,000 ரூபாயை அந்நிறுவனம் வட்டியாக அளித்ததால், பலரும்
முதலீடு செய்தனர்.
இந்நிறுவன இயக்குனர்கள் வெளிநாடு தப்பியோடி
விட்டதால், ஏஜென்டுகள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். ஏஜென்டுகள்
சிலரையும் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில், மின்மினி சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து, அவர் அளித்த தகவல் அடிப்படையில், பல ஏஜென்டுகளை பிடித்தனர்.
இருப்பினும்,
சென்னை கோட்டூர்புரம் ஏரிக்கரை சாலையில் வசித்து வந்த, முக்கிய ஏஜென்ட்
தமிழ்செல்வன் குறித்த தகவல் ஏதுமில்லை. தொடர்ந்து குடும்பத்துடன் அவர்
தலைமறைவாகவே உள்ளார்.
தமிழ்செல்வன் 199 கோடி ரூபாய் வரை
முதலீட்டாளர்களிடம் வசூலித்ததாக, இவரிடம் ஏமாந்தவர்கள், சென்னை பொருளாதார
குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2023 ஏப்., மே மாதங்களில் இருந்து
தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
மேலும் இவரிடம்
புணிபுரிந்த உதவி ஏஜென்ட் ஓய்வுபெற்ற எஸ்.ஐ., வேலாயுதராஜன் என்பவரும்,
தமிழ்செல்வன் வழியாக 5 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.
மேலும்,
வேலாயுதராஜன் திருநெல்வேலி, தென்காசியைச் சேர்ந்த அவரது உறவினர்கள்,
நண்பர்கள் என பலரிடம் லட்சக்கணக்கில் வசூலித்து, தமிழ்செல்வனிடம்
வழங்கியுள்ளார்.
இதனால், பணத்தை இழந்தவர்கள் ஏஜென்ட் தமிழ்செல்வன்
மீதும், உதவி ஏஜென்ட் வேலாயுதராஜன் மீதும், சென்னை பொருளாதார
குற்றப்பிரிவில் புகார் செய்துள்ளனர். புகார் அளித்து இரண்டு ஆண்டுகள்
ஆகின்றன. ஆனால், எந்தவித முன்னேற்றமும் இல்லை.
முதலீடு
செய்தவர்களில் பலர் ஆரம்ப காலகட்டத்தில், 15 மாதங்கள் வரை வட்டி
வாங்கியுள்ளனர். இதில் அப்பாவிகளான சிலர் முதலீடு செய்த ஒரு மாதம் மட்டும்,
வட்டி வாங்கியுள்ளனர்.
முதலீடு செய்த அடுத்த மாதமே, நிதி நிறுவனம்
கம்பி நீட்டியது. முதலீடு செய்த லட்சக்கணக்கான பணம் திரும்ப கிடைக்காததால்,
பலரது குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டது.
லட்சக்கணக்கான
ரூபாய் கடனாளி ஆகினர். பலர் நகை, வீடு அடமானம் வைத்து முதலீடு
செய்திருந்தனர். அதுபோன்ற பலரும் பாதிக்கப்பட்டு, இன்று வரை முதலீடு பணம்
திரும்ப கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
கடன் தொல்லையால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.
பலரது
வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய இந்த நிதி நிறுவன மோசடி பற்றி போதிய
தகவல்களும், போலீசாரிடம் இருந்து முதலீட்டாளர்களுக்கு கிடைக்காததால்,
பாதிக்கப்பட்டோர் புலம்பி வருகின்றனர்.
இதுவரை எடுக்கப்பட்ட
நடவடிக்கை விபரம், முதலீடு பணம் திரும்ப கிடைக்க என்ன செய்ய வேண்டும் என
தெளிவான விளக்கம் ஆகியவற்றை, போலீசார் அளிக்க வேண்டும்.
முதல்வர்
ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு, முதலீட்டாளர்களுக்கு பணம் கிடைக்க
காவல் துறையை முடுக்கி விட வேண்டும் என, ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ்.,
அன்னை கேபிட்டல் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள்
எதிர்பார்க்கின்றனர்.