/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடைபயிற்சியில் பங்கேற்றோருக்கு மருத்துவ பரிசோதனை
/
நடைபயிற்சியில் பங்கேற்றோருக்கு மருத்துவ பரிசோதனை
ADDED : மார் 03, 2025 12:35 AM
காஞ்சிபுரம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற எட்டு கி.மீ., துார நடைபயிற்சி இயக்கத்தை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது.
அதன்படி, மார்ச் மாதத்திற்கான, 'நடப்போம் நலம் பெறுவோம்' இயக்கத்தின், நடைபயிற்சியை, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் டாக்டர் மனோகரன், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க மதிப்புறு செயலர் டாக்டர் முத்துக்குமரன், திருப்புட்குழி சுகாதார நிலைய நடமாடும் மருத்துவக் குழு மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயராஜ், உள்ளிட்டோர், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் நேற்று துவக்கி வைத்தனர்.
இதில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை பணியாளர்கள், காஞ்சிபுரம் மாநகராட்சி தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 75 பேர் பங்கேற்றனர்.
நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு திருப்புட்குழி வட்டார சுகாதார நிலைய நடமாடும் மருத்துவக் குழுவினர், ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்தனர்.