/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பருவமழை முன்னெச்சரிக்கை நீர்வழித்தடம் சீரமைப்பு
/
பருவமழை முன்னெச்சரிக்கை நீர்வழித்தடம் சீரமைப்பு
ADDED : ஆக 03, 2024 01:14 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடிற்கும், புஞ்சையரசந்தாங்கலுக்கும் இடையே பாலாற்றின் குறுக்கே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் உள்ளது.
இந்த பாலம் வழியாக பெருநகர், வந்தவாசி, திருவண்ணாமலை, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கார், வேன், பேருந்து, லாரி என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
உயர்மட்ட பாலத்தின் கீழ், நீர்வழித்தடம் பகுதியில் கருவேலம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் புதர்போல மண்டி கிடந்தன. இதனால், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பாலத்தின் கீழ் உள்ள நீர்வழித்தடத்தின் வழியாக வெள்ளநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
இதனால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தின் கீழ் நீர்வழித்தட பாதை சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது:
தென்மேற்கு பருவமழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தின் கீழ் நீர்வழித்தடத்தில், புதர்போல மண்டிகிடந்த கருவேலம், வேம்பு உள்ளிட்ட மரங்கள் பொக்லைன் இயந்திரம் வாயிலாக வேருடன் அகற்றப்பட்டன.
மேலும், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், வெள்ளநீர் தடையின்றி செல்லவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.