ADDED : ஏப் 20, 2025 12:50 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே திருத்தலம் என, அழைக்கப்படும் புஷ்பவல்லி தாயார் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும்.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் சப்பரத்தில் எழுந்தருளிய அஷ்டபுஜ பெருமாள் வீதியுலா வந்தார். மாலை சிம்ம வாகன உத்சவம் நடந்தது. இரண்டாம் நாள் உத்சவமான கடந்த 14ம் காலை ஹம்ச வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும் மூன்றாம் நாள் உத்சவமான 15ம் தேதி காலை கருடசேவை உத்சவமும், மாலை ஹனுமந்த வாகன உத்சவமும் விமரிசையசாக நடந்தது.
நான்காம் நாள் உத்சவமான கடந்த 16ம் காலை சேஷ வாகனத்திலும், மாலை சந்திர பிரபையிலும், ஐந்தாம் நாள் உத்சவமான 17 ம் தேதி காலை நாச்சியார் திருக்கோலத்திலும், மாலை யாளி வாகனத்திலும் சுவாமி உலா வந்தார். ஆறாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் காலை வேணுகோபாலன் திருக்கோலத்திலும், இரவு யானை வாகனத்திலும் அஷ்டபுஜ பெருமாள் வீதியுலா வந்தார்.
இதில், ஏழாம் நாள் பிரபல உத்சவமான நேற்று காலை தேரோட்டம் விமரிசையசாக நடந்தது. இதில், நேற்று காலை 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் அஷ்டபுஜ பெருமாள் எழுந்தருளினார். பல்வேறு பூஜைகளுக்குப்பின் 7:52 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் அசைத்து ஆடியபடியே பல்வேறு வீதி வழியாக பவனி வந்தது.
மாலை திருமஞ்சனம் நடந்தது. எட்டாம் நாள் உத்சவமான இன்று காலை திருப்பாதம்ஜாடி திருமஞ்சனமும், மாலை குதிரை வாகன உத்சவமும், ஒன்பதாம் நாள் உத்சவமான நாளை காலை ஆள்மேல் பல்லக்கும், மாலை சக்ரகோட்டி விமான உத்சவமும் நடைபெறுகிறது. வரும் 22ம் தேதி காலை த்வாதச ஆராதனமும், மாலை வெட்டிவேர் சப்பரத்துடன் சித்திரை பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.
உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறங்காலர்கள் இளங்கோவன், தேவிகா, கோவில் அர்ச்சகர்கள், அர்ச்சகர்கள் முரளிபட்டர் கமலகண்ணன், உபயதாரர்கள் உள்ளிட்டோர் இணைந்து செய்து வருகின்றனர்.