/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சிகளில் 208 வளர்ச்சி பணிகள் 6 மாதங்களில் முடிக்க திட்டம்
/
ஊராட்சிகளில் 208 வளர்ச்சி பணிகள் 6 மாதங்களில் முடிக்க திட்டம்
ஊராட்சிகளில் 208 வளர்ச்சி பணிகள் 6 மாதங்களில் முடிக்க திட்டம்
ஊராட்சிகளில் 208 வளர்ச்சி பணிகள் 6 மாதங்களில் முடிக்க திட்டம்
ADDED : ஏப் 22, 2024 04:17 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், அண்ணா மறுலர்ச்சி திட்டத்தில் தேர்வான ஊராட்சிகளில், 208 விதமான வளர்ச்சி பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பணிகளை ஆறு மாதங்களில் முடிக்க, ஊரக வளர்ச்சி துறை முடிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
தலா ஒவ்வொரு ஊராட்சிக்கும், 30 லட்சம் ரூபாய் கிராம வளர்ச்சி நிதி, குக்கிராம வளர்ச்சி நிதி மற்றும் மக்கள் தொகை அடிப்படை நிதி என, பல நிதிகளை சேர்த்து அண்ணா மறுலர்ச்சி திட்டம்- - 2 நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த நிதி பெறுவதற்கு, ஆண்டுதோறும் தலா 55 ஊராட்சிகளை தேர்வு செய்து, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், சாலைகள், நெற்களங்கள், செடிகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி துறை செய்து கொடுக்கிறது.
கடந்த 2021 - 22ம் நிதி ஆண்டில், 55 ஊராட்சிகளுக்கு, 23.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, 2022 - 23ம் நிதி ஆண்டும் அதே போல, 55 ஊராட்சிகளை தேர்வு செய்து, 21.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்தனர்.
அதை தொடர்ந்து, 2023 - 24ம் நிதி ஆண்டிற்கு 55 ஊராட்சிகளை தேர்வு செய்து, 20.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கட்டடங்கள் கட்டுமானம், புதுப்பிக்கும் பணி, நெற்களங்கள் கட்டிக் கொடுக்கும் பணிகள் ஆக்கப்பூர்வமாக உள்ளன; பொது மக்களும் பயன் பெறும் வகையில் இருக்கின்றன.
நடப்பாண்டு, 2024 - 25ம் ஆண்டிற்கு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 55 ஊராட்சிகள் தேர்வாகி உள்ளன. இந்த ஊராட்சிகளில் குளங்கள் மேம்பாடு பணிகள், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலக கட்டடம், ரேஷன் கடை கட்டடம் என, பல்வேறு விதமான கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன.
இவற்றுக்கு, 20.68 கோடி ரூபாய் செலவில் 213 பணிகளை, அந்தந்த வட்டார வளர்ச்சி நிர்வாகம் தேர்வு செய்திருந்தன.
தேர்வு செய்த பணிகள் மற்றும் அளவீடுகள் சரியாக உள்ளதா என, ஊரக வளர்ச்சி துறை உயர்மட்டக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்கு பின், 20.65 கோடி ரூபாய் செலவில் 208 பணிகள் செய்யலாம் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு, லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், ஊரக வளர்ச்சி துறை நிர்வாக அனுமதி அளித்துள்ளது.
இந்த வளர்ச்சி பணிகளை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறை திட்டமிட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த வளர்ச்சி பணிகள் மூலமாக, ஊராட்சிகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறையினர் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நடப்பு நிதி ஆண்டு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு, 55 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
தேர்வு செய்த பணிகளின் தன்மையை ஆய்வு செய்த பின், 208 பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன; 20.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இந்த வளர்ச்சி பணிகளை ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். பெரும்பாலான பணிகளை வட கிழக்கு பருவ மழைக்கு முன் நிறைவு செய்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

