கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு!:நிலத்தடி நீர் மாசுபடும் என மக்கள் கொதிப்பு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு!:நிலத்தடி நீர் மாசுபடும் என மக்கள் கொதிப்பு
UPDATED : ஜூன் 12, 2026 11:43 AM
ADDED : ஜூன் 11, 2026 11:43 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் பணியால், நிலத்தடி நீர் மாசுபடும்; விவசாயம் பாதிக்கும் எனக்கூறி, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இடத்தை ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். தொடர்ந்து எதிர்ப்பு வருவதால், திட்டத்தை செயல்படுத்த முடியாமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தவித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதிகளில் வீடுகள், நிறுவனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை, நேரடியாக நீர்நிலைகளில் விடாமல், சுத்திகரிப்பு செய்து, திடக்கழிவுகளை உரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, திணையாம்பூண்டி ஊராட்சியில் இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள், கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை.
தற்போது, வாடாதவூர் கிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக நேற்று முன்தினம் வாடாதவூர் கிராமத்தில், திட்ட செயல்பாட்டிற்கான ஆய்வு பணியில், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அப்போது, தங்கள் கிராமத்தில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைத்தால், நிலத்தடி நீர் மாசுபடும். பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகளை தொடங்காமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து, வாடாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் சடையாண்டி கூறியதாவது:
வாடாதவூரில் விவசாய நிலங்கள் மற்றும் ஊராட்சிக்கான குடிநீர் கிணறு அமைந்துள்ள பகுதியில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதனால், நிலத்தடி நீர் பாதித்து, காற்று மாசு போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என, பொது மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. தேர்வு செய்துள்ள இடத்தில் பட்டா நிலம் சேர்ந்து வருவதாக, நில உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
எனவே, பல்வேறு பிரச்னைகள் எழுவதால், இத்திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவேல் கூறியதாவது:
உத்திரமேரூர் ஒன்றியம், வாடாதவூர் கிராமத்தில், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மண் பரிசோதனை முடிந்துள்ளது.
இதனிடையே, சுத்தகரிப்பு நிலையம் அமைக்க தேர்வான இடத்திற்கு அருகில், பட்டா நிலம் வைத்துள்ள சிலர், விவசாயம் பாதிக்கும் என அச்சப்படுவதாக தெரிகிறது.
கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையத்தால், நிலத்தடி நீர் எந்த வகையிலும் பாதிக்காது; காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படாது. இதுகுறித்து, கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
