/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி வரதர் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு
/
காஞ்சி வரதர் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு
ADDED : மே 31, 2024 02:16 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடந்து, 10 நாட்கள் நடந்த உற்சவத்தில் வரதராஜ பெருமாள் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பல்வேறு வீதிகள் வழியாக வீதியுலா சென்று வந்தார்.
இதில், பிரபல உற்சவமான கருடசேவை உற்சவம் கடந்த 22ம் தேதியும், தேரோட்டம், 26ம் தேதியும், தீர்த்தவாரி உற்சவம் 28ம் தேதியும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு வெட்டிவேர் சப்பரத்துடன் கொடி இறக்கப்பட்டு, வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.
தொடர்ந்து, மூன்று நாட்கள் நடைபெறும் விடையாற்றி உற்சவம் நேற்று துவங்கியது. இதில், முதல் நாள் உற்சவமான பெருமாள் திருவடிகோவில் புறப்பாடு நடந்தது.
இதில் காலை, 11:00 மணிக்கு, நுாற்றுகால் மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம் நடந்தது.
விடையாற்றி உற்சவத்தின் நிறைவு நாளான நாளை, இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது. இதில், பல வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், சன்னிதி தெரு, குறுக்கு தெரு, அண்ணா தெரு, நான்கு மாட வீதி, ஆணை கட்டி தெரு வழியாக வீதியுலா சென்று மீண்டும் சன்னிதி வந்தடைகிறார்.