/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெண்ணை கர்ப்பமாக்கி துபாய் பறந்தவர் சிக்கினார்
/
பெண்ணை கர்ப்பமாக்கி துபாய் பறந்தவர் சிக்கினார்
ADDED : ஜூலை 30, 2024 07:20 AM
திருப்போரூர்: கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் தன்சீம் குவாலாப், 33. இவருக்கும், திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும், கடந்த 2019ம் ஆண்டு முதல் கணவன், மனைவியாக வசித்து வந்தனர்.
இதில், இளம்பெண் மூன்று முறை கர்ப்பம் அடைந்துள்ளார்; குழந்தை வேண்டாம் என தன்சீம் கூறியதால், மூன்று முறையும் கருவை கலைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டு, மீண்டும் அப்பெண் கர்ப்பம் தரித்தார். எட்டு மாதங்கள் கடந்த நிலையில், தன்சீமிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தன்சீம் வீட்டில் இருந்து வெளியேறினார். அப்போது, வீட்டில் இருந்த ஐ-போன் மற்றும் 3 லட்சம் ரூபாய் எடுத்துச்சென்றதாக தெரிகிறது.
இதுதொடர்பாக, 2022ல் கேளம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், தன்சீம் துபாய்க்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. தன்சீம் குறித்து, அனைத்து விமான நிலையங்களுக்கும், 'லுக் -அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 27ம் தேதி, துபாயில் இருந்து மும்பை வழியாக கேரளா வருவதற்கு, தன்சீம் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பது தெரிந்தது. இதை அறிந்த மும்பை போலீசார், மும்பை விமான நிலையம் வந்திறங்கிய தன்சீமை பிடித்து, சென்னை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, மும்பை சென்ற கேளம்பாக்கம் போலீசார், தன்சீம் குவாலாப்பை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின் அவரை, திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.