ADDED : பிப் 25, 2025 02:06 AM

ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து, வல்லக்கோட்டை அடுத்த வல்லம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக ஒரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, போலீசார் நேற்று காலை வல்லம் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையில், 2.150 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த பிரமோத்குமார் பரிதா, 48, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாலை சக்சேனா, 45, என தெரிந்தது.
இவர்கள், வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
இதையடுத்து, 45,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.